பாமர மக்கள் பயன்பெற கணினி இணைய தமிழ் குறித்து பல்கலைக்கழகங்கள் பயிற்சி அளிக்க வேண்டும்: முனைவர் பொன்னவைக்கோ
தமிழில் கணினி இணையத்தை பயன்படுத்த கிராமப்புற அளவில் பாமர மக்களுக்கு பல்கலைக்கழகங்கள், உத்தமம் அமைப்புடன் இணைந்து பயிற்சி அளிக்க வேண்டும் என எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ தெரிவித்தார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் உயராய்வு மையம், உலகத்தமிழ் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) மற்றும் கணி தமிழ்சங்கம் ஆகியவை இணைந்து 11-வது உலகத்தமிழ் இணைய மாநாட்டை பல்கலைக்கழக குமாரராஜா முத்தையா அரங்கில் டிச.28 முதல் 30 வரை நடத்தியது. மாநாட்டு நிறைவு விழா நடைபெற்றது.
மாநாட்டில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ பங்கேற்று நிறைவு உரையாற்றினார். அவர் பேசியதாவது: தமிழகஅரசு கணினி தமிழை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. யுனிகோடினை மட்டும் நம்பாமல் அனைத்து எழுத்து தரப்பாட்டினை மேம்படுத்தினால்தான் கணினி தமிழை மேம்படுத்த முடியும். இணையத்தளம் ஆங்கிலத்தில்தான் உள்ளது. அதை நமது தமிழ் வழியில் கொண்டுவர முயற்சி மேற்கொள்ள வேண்டும். அடுத்த மாநாடு வருகிற ஆகஸ்டு மாதம் மலேசியாவில் நடத்தப்படவுள்ளது. அம்மாநாட்டில் இணையதளம் தமிழில் உருவாக்கப்பட்டதை அறிவிக்கப்படும். இணைய தளத்தில் தமிழ்வழி பயன்படுத்துவது குறித்து பல்கலைக்கழகங்கள், உத்தமம் அமைப்புடன் இணைந்து கிராமப்புற அளவில் பாமக மக்கள் பயன்பெறும் வகையில் பயிற்சிகளை அளிக்க வேண்டும். அதற்கான பணிகளை பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து நாடுகளிலும் அந்த நாட்டு மொழிகளில் கணிப்பொறி உள்ளது. அதுபோன்று நமது நாட்டிலும் தனி தமிழ் கணிப்பொறி உருவாக்க வேண்டும் என பொன்னவைக்கோ கூறினார்.
Advertisement