குன்னூரில் இலங்கை ராணுவத்தினர்: நாளை கருத்தரங்கில் கலந்து கொள்வதால் பரபரப்பு
குன்னூரில் தாஜில் இலங்கை ராணுவ அதிகாரிகள் 4 பேர் வந்து தங்கியுள்ளனர். இவர்களுக்கு குன்னூரில் எம்.ஆர்.சி எனப்படும் மெட்ராஜ் ரெஜிமெண்ட்
குன்னூர், ஜூலை 15: இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் உள்பட எதிர்க்கட்சிகள் பலவும் எதிர்ப்புக் குரல் எழுப்பின. இந்நிலையில், தமிழகத்தில் அவர்கள் பயிற்சி பெற இருந்தது, பெங்களூருக்கு என்று மாற்றி அமைக்கப்பட்டது. இதற்கும் எதிர்ப்புக் குரல் எழுந்தது. இந்தியாவில் எங்குமே இலங்கை ராணுவத்தினர் பயிற்சி பெறக்கூடாது என்று கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றனர்.
குன்னூருக்கு அருகே கொடநாடு பகுதியில் தமிழக முதல்வர் தங்கியுள்ளார். அவரைக் காண அமைச்சர்கள் பலரும் வந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், குன்னூரில் தாஜ் ஹோட்டலில் இலங்கை ராணுவ அதிகாரிகள் 4 பேர் வந்து தங்கியுள்ளனர். இவர்களுக்கு குன்னூரில் எம்.ஆர்.சி எனப்படும் மெட்ராஜ் ரெஜிமெண்ட் செண்டரில் பயிற்சி வகுப்பு இருப்பதாகவும், அவர்கள் இன்று குன்னூரில் சுற்றுப் பயணம் செய்துவிட்டு, நாளை நடக்கும் வகுப்பு மற்றும் கருத்தரங்கில் கலந்து கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டது.
Advertisement
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை ராணுவத்துக்கு எதிராக, தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு என அரசியல் சூழ்நிலை நிலவும்போது, இந்தச் செய்தி குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரும் அந்தப் பகுதியில் தங்கியிருப்பதால், இது பெரும் பிரச்னையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்புக் குரல் எழுந்ததை அடுத்து, போலீஸார் தாஜ்-கேட் வே விடுதிக்கு முன்னர் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அந்தப் பகுதியில் பலப்படுத்தப்பட்டுள்ளது.