முகப்பு
தற்போதைய செய்திகள்

போடியில் தேவர் சிலைக்கு அவமதிப்பு: சாலை மறியல்

போடி அருகே தேவாரத்தில் தேவர் சிலையை அவமதித்ததாக கூறி சாலை மறியல் நடைபெற்றது. பதற்றமான சூழ்நிலையால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:27 PM
பகிர்:

போடி அருகே தேவாரத்தில் தேவர் சிலையை அவமதித்ததாக கூறி சாலை மறியல் நடைபெற்றது. பதற்றமான சூழ்நிலையால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போடியை அடுத்துள்ள தேவாரத்தில் காவல் நிலையம் முன்பாக தேவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேவர் சிலையை சனிக்கிழமை சிலர் அவமதிப்புக்குள்ளாக்கியதாக கூறப்படுகிறது. சாணம் போன்ற பொருளை கரைத்து ஊற்றியிருந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து தேவாரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து போடி டி.எஸ்.பி. கு.அருள்அமரன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும் போடி பகுதி முழுவதும் போலீஸார் ரோந்து சென்றனர். தேவாரத்தில் கடைகள் அடைக்கப்பட்டன.

பதற்றமான சூழ்நிலையை தவிர்க்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், வட்டாட்சியர் ஜவஹர்லால் பாண்டியன் ஆகியோர் குறிப்பிட்ட சமூக மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதனையடுத்து தேவர் சிலையை கழுவி சுத்தம் செய்து, பால் அபிஷேகம் நடைபெற்றது.

இதனிடையே பிற்பகலில் சட்டப்பேரவை உறுப்பினரும், பார்வர்டு பிளாக் கட்சி தலைவருமான எஸ்.ஆர்.தமிழன் தேவாரத்திற்கு வருகை தந்தார். இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. எஸ்.ஆர்.தமிழன் தலைமையில் ஏராளமானோர் தேவர் சிலையை அவமதித்தவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி போடி-உத்தமபாளையம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் பேருந்துகள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.

இதனையடுத்து போலீஸார் சமாதானப்படுத்தவே சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனிடையே அடையாளம் தெரியாத நபர்கள் தேவர் சிலையை அவமதித்ததாக கூறி தேவாரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் போடி உள்கோட்ட அளவில் தேவர் சிலை, அம்பேத்கர் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.