ஒரே நாளில் 5 மருத்துவமனைகளில் சிகிச்சை: டெங்குவில் சிறுமி சாவு
ஒரே நாளில் 5 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற சிறுமி, டெங்கு காய்ச்சலில் இறந்தார்.
ஒரே நாளில் 5 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற சிறுமி, டெங்கு காய்ச்சலில் இறந்தார்.
ஈரோடு அருகே மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் வி.சந்திரன் (33). இவரது மனைவி காயத்திரி (29). சந்திரன் தறிப்பட்டறையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இத்தம்பதியினரின் மகள் எஸ்.ஸ்ரீவர்ஷினி (5). காய்ச்சல் காரணமாக ஸ்ரீவர்ஷினியை, ஈரோடு அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை ஈரோடு அரசு மருத்துவமனையில் அவரது பெற்றோர் சேர்த்தனர். பின்னர் அதே நாளில் அடுத்தடுத்து 4 தனியார் மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர்.
பின்னர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க் கிழமை அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீவர்ஷினி புதன்கிழமை இறந்தார். அவருக்கு டெங்கு அறிகுறி இருந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு வேண்டுகோள் :
இது குறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் சேகர் கூறியது:
ஸ்ரீவர்ஷினியின் மருத்துவ அறிக்கையின்படி ஆரம்பகட்ட சோதனையில் டெங்கு இருந்ததற்கான சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை காலை அரை மணி நேரம் மட்டும்தான் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் ஈரோட்டில் உள்ள மேலும் 4 மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். அதைத்தொடர்ந்து தான் சேலத்தில் அனுமதித்துள்ளனர்.
ஒரே மருத்துவமனையில் 24 மணிநேரம் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தால் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு அதை குணப்படுத்தியிருக்க முடியும். எனவே, டெங்கு அறிகுறியுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை மருத்துவமனைகள் 24 மணிநேரமும் வைத்து கண்காணிக்க வேண்டும். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்க மறுத்தால் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் அல்லது சுகாதாரத்துறை துணை இயக்குநரை பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.