முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீபார்வதீஸ்வரர் காரைக்கால் அரசலாற்றில் கடைமுக தீர்த்தவாரி

ஸ்ரீபார்வதீஸ்ரசுவாமி கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வியாழக்கிழமை இன்று அரசலாற்றங்கரைக்கு...

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:35 PM
பகிர்:

ஸ்ரீபார்வதீஸ்ரசுவாமி கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வியாழக்கிழமை இன்று அரசலாற்றங்கரைக்கு எழுந்தருளி கடைமுக தீர்த்தவாரி (துலா ஸ்நானம்) கண்டனர்.  ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

நூற்றாண்டுகள் பழமை பெற்ற பாடல் பெற்ற தலமாக விளங்கும் காரைக்கால் திருத்தெளிச்சேரி என்னும் காரைக்கோவில்பத்து பகுதியில் ஸ்ரீசுயம்வர தபஸ்வினி உடனமர் ஸ்ரீ பார்வதீஸ்வரர் கோவில் உள்ளது. மழையின்றி வறண்ட பூமியில், மழை பெய்வித்து, இறைவனே உழவனாக வந்து, விளைநிலத்தில் விதைத்ததாக இக்கோவிலுக்கு சிறப்பு உண்டு. இதனால் இப்பகுதிக்கு திருத்தெளிச்சேரி என்ற பெயரும் வந்ததாக கூறப்படுகிறது. இக்கோவிலில் பல்வேறு விழாக்களும் நடத்தப்பட்டு வந்த நிலையி, சுமார் 30 ஆண்டுகளாக அவை நிறுத்தப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

புதுவை அரசின் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட இக்கோவிலில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் கடந்த ஆண்டு முதல் முறையாக தொடங்கப்பட்டது. நிகழாண்டு புதன்கிழமை காலை சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ரீ சுயம்வர தபஸ்வினி சமேதராக ஸ்ரீ சந்திரசேகர சுவாமி ரிஷப வாகனத்தில், காரைக்கால் அரசலாற்றங்கரைக்கு வியாழக்கிழமை காலை எழுந்தருளினார்.

முக்கிய வீதிகளின் வழியே சென்று சுவாமிகளுக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். அரசலாற்றில் அஸ்திரதேவரை இறக்கி முழுக்கு செய்யப்பட்டது. பிறகு கரையில் அஸ்திரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது.

நதிகளுக்கு ஏற்பட்ட தோஷத்தால் தண்ணீர் வற்றி இருந்ததாகவும், பிறகு நதி தேவதைகள் ஒன்றுகூடி பரமேஸ்வரனை வணங்கியதாகவும், பிறகு தோஷ நிவர்த்தி ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்ததாகவும் தல புராணம். இதில் அம்பிகையோடு பரமேஸ்வரன் நீராடியதையே கடைமுக தீர்த்தவாரியாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோவில் விழாவில் திரளான பக்தர்கள் வந்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். தீர்த்தவாரி நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி (கோவில்கள்) ஏ.ராஜராஜன்வீரசாமி, ஸ்ரீ பார்வதீஸ்வரசுவாமி கோவில் தனி அதிகாரி கோவி.ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →