ஈரோடு அருகே இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம்: இருவருக்கு ஆயுள்
ஈரோடு அருகே இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அண்ணன், தம்பிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு கருங்கல்பாளையம் ஆறுமுகம் என்பவரின் மகன் டொய்யா மணி (28), முத்துச்சாமி என்பவரின் மகன்கள் கோபால் (எ) கோபாலகிருஷ்ணன் (29), மதன்குமார் (29), பொன்னுசாமி என்பவரின் மகன் செந்தில் (எ) செந்தில்குமார் (29), ஜெயகிருஷ்ணன் என்பவரின் மகன் பரணி (26), நிஜாமுதீன் (26). இவர்கள் 6 பேரும் நண்பர்கள். இவர்கள் மீது வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், இவர்கள் 6 பேரும், கருங்கல்பாளையம் காவேரி சாலையில் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது டொய்யா மணியை, கோபால், மதன்குமார் ஆகியோர் கேலி செய்தார்களாம். இந்நிலையில் மனஉளச்சலில் இருந்த டொய்யா மணி, நிஜாமுதீனை அழைத்துக்கொண்டு கோபால், மதன்குமார் ஆகியோரின் வீட்டுக்கு அதே தினத்தில் இரவு சென்றாராம்.
அப்போது டொய்யா மணி, கோபால், மதன்குமார் ஆகியோர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது கோபால் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து டொய்யா மணியின் குத்தினாராம். இதில் படுகாயம் அடைந்த டொய்யாமணி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதில் காயமடைந்த நிஜாமுதீன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் 26.8.2012-ல் நடந்தது.
இச்சம்பவம் தொடர்பாக கருங்கல்பாளையம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து கோபால், மதன்குமார் ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இறுதிகட்ட விசாரணை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், குற்றஞ்சாட்டப்பட்ட கோபால், மதன்குமார் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
அரசுத் தரப்பில் கூடுதல் வழக்குரைஞர் பி.கிருஷ்ணசாமி ஆஜரானார்.