பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.40 கோடி மோசடி: சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மகள் மீது புகார்
பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி ரூ.40 கோடி மோசடி செய்ததாக சேலம் மாவட்ட வருவாய் அலுவலரின் மகள் மீது புகார் எழுந்துள்ளது.
பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி ரூ.40 கோடி மோசடி செய்ததாக சேலம் மாவட்ட வருவாய் அலுவலரின் மகள் மீது புகார் எழுந்துள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னியிடம், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை கொடுத்த புகார் மனு:
ஈரோடு அருகே சாஸ்திரிநகர் பிருந்தா கார்டனில் 100 குடும்பத்தினருக்கு மேல் வசித்து வருகிறோம். இதே பகுதியில் வசிக்கும் சஞ்சீவராயனின் மனைவியும், சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன வெங்கடேசனின் மகளுமான பிருந்தா, பெஸ்ட் ஷேர் நிறுவனம் என்னும் பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இதில் முதலீடு செய்தால் அதிக ஊக்கத்தொகை தருவதாக இந்நிறுவன நிர்வாகிகள் கூறியதை நம்பி ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை நூற்றுக்கணக்கானோர் முதலீடு செய்தோம். ஈரோடு நகரில் மட்டும் ரூ.40 கோடி வரை வசூலித்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
ஆனால், இப்போது திடீரென ஊக்கத்தொகையும் வழங்கவில்லை. முதலீட்டுத்தொகையை திரும்பக்கேட்டால் தரமறுக்கின்றனர். எனவே, இந்நிறுவன நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.