விவசாயி கொலை வழக்கு: சித்தப்பாவுக்கு ஆயுள் சிறை
ஈரோடு அருகே விவசாயியை கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அவரது சித்தப்பாவுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு அருகே விவசாயியை கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அவரது சித்தப்பாவுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காஞ்சிக்கோவில் தண்ணீர்பந்தல்பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல் (56). விவசாயி. இவரது மனைவி பழனியம்மாள். இத்தம்பதியினரின் மகன் ஆனந்த் (24).
தங்கவேலின் உடன் பிறந்த அண்ணன் கருப்பண்ணன் மகன் பழனிச்சாமி (45). தங்கவேல், பழனிச்சாமி இடையே பூர்வீக சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், தனது வீட்டின் அருகே உள்ள சாலை வழியாக பழனிச்சாமி சென்றபோது தங்கவேலுக்கும், பழனிச்சாமிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாம்.
அப்போது ஆத்திரம் அடைந்த தங்கவேல், தன்னிடம் இருந்த கத்தியால் பழனிச்சாமியின் மார்பில் குத்தி கொலை செய்தாராம். இச்சம்பவம் 6.6.2011-ல் நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக தங்கவேல், ஆனந்த், பழனியம்மாள் ஆகியோரை காஞ்சிக்கோவில் போலீஸார் கைது செய்தனர்.
இவ்வழக்கு ஈரோடு மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமை நடந்த இறுதிகட்ட விசாரணையின்போது வழக்கை விசாரித்த நீதிபதி சர்வமங்கலா, இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தங்கவேலுக்கு ஆயுள்சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆனந்த், பழனியம்மாள் ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
அரசுத் தரப்பில் கூடுதல் வழக்குரைஞர் துரை சக்திவேல் ஆஜரானார்.