அலையாத்திக் காடு: வெளிநாட்டுப் பறவைகள் வருகையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
காரைக்கால் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள அலையாத்திக் காடு பகுதிக்கு செங்கால் நாரை உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகள்
காரைக்கால் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள அலையாத்திக் காடு பகுதிக்கு செங்கால் நாரை உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகள் வருகை அதிகரித்துள்ளது சுற்றுலாவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காரைக்கால் கடற்கரைப் பகுதி இயற்கையாகவே ஆறு கடலில் சங்கமிக்கும் பகுதியாகவும், காடு வளத்துடனும் அமையப்பெற்றது. திருநள்ளாறு, காரைக்கால் அம்மையார் கோவில், நாகூர், வேளாளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலாவினர், காரைக்கால் கடற்கரைக்கு சென்று செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கடற்கரைப் பகுதியில் உள்ள நிலப்பரப்பில் அலையாத்திக் காடு வளர்க்கப்படுகிறது. இதில் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டுப் பறவைகள் சில வந்து தங்கி செல்வதை வழக்கமாகிக்கொண்டுள்ளது. நிகழாண்டு காடு நல்ல நிலையில் வளர்ச்சி பெற்றுள்ள காடு பகுதியில், சனிக்கிழமை அதிகாலையிலேயே செங்கால் நாரை, நீர்க்கோழி, கொக்கு என கூறப்படும் வெளிநாட்டுப் பறவை நூறுக்கும் மேற்பட்டவை வந்து தங்கின.
உடல் கறுப்பு, வெள்ளை நிறத்திலும், மூக்கு மஞ்சள் நிறத்திலும், கால்கள் சிகப்பு நிறத்திலும் உள்ள இவ்வகையை செங்கால் நாரை என சொல்லப்படுகிறது. குறிப்பாக இது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சைபீரியா போன்ற நாடுகளில் இருந்து இடம்பெயர்ந்து தமிழகப் பகுதியில் கோடியக்கரை, வேடந்தாங்கல் பகுதியை நோக்கி வருவதை வழக்கமாகக்கொண்டுள்ளது. மேலும் கொக்கு, கூழைக்கடா உள்ளிட்டவையும் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடியது.
காரைக்கால் கடற்கரையில் வந்து தங்கிய பறவைகள் பல மணி நேரம் வரை அலையாத்திக் காடு பகுதியில் உணவுக்காக அங்குமிங்கும் பறந்துகொண்டிருந்தது.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவிலில் ஸ்ரீ சனீஸ்வரபகவானை வழிபட வந்த பக்தர்கள் பெரும்பாலானோர் கடற்கரைக்கு வந்தபோது, வெளிநாட்டுப் பறவைகளை கண்டு புகைப்படமெடுத்து மகிழ்ந்தனர். கோடியக்கரைப் பகுதியை நோக்கி செல்லும் வழியில் காரைக்கால் பகுதியில் இது தங்கியுள்ளதென தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து சுற்றுலாத்துறை உதவி இயக்குநர் தெட்சணாமூர்த்தி சனிக்கிழமை கூறும்போது, காரைக்கால் கடற்கரையில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் அலையாத்திக் காடு வளர்க்கப்படுகிறது. 1996-ம் ஆண்டு ரூ.6 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டது தற்போது வளர்ச்சி கண்டுள்ளது. இந்த வளர்ச்சியின் மூலம் வெளிநாட்டுப் பறவைகள் ஈர்க்கப்படுகிறது. வரும் ஆண்டிலிருந்து இப்பறவைகள் காரைக்காலிலேயே தங்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகிவருகிறது. அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை இதுபோன்ற வெளிநாட்டுப் பறவைகள் தமிழகப் பகுதியை நோக்கி வந்து தங்குகிறது. இங்கேயே முட்டையிட்டு குஞ்சு பொறிக்கிறது. இதை பயன்படுத்தி சுற்றுலாவினரை ஈர்க்க, இப்பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு தி்ட்டங்கள் தயாரித்து மத்திய சுற்றுலாத்துறையின் நிதியுதவிக்கு அனுப்பியுள்ளோம்.
இதன்படி இப்பகுதியில் படகு சவாரி, சிறி்ய ரயில், தியானக்கூடம், மினி தியேட்டர், குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா, நீரில் மிதக்கும் உணவகம் உள்ளிட்டவை இதில் அடங்கும். வெளிநாட்டுப் பறவைகள் வருகையின் மூலம் இத்திட்டம் விரைவில் அமல்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.