கடையம் அருகே மின்வேலி அமைத்த 4 பேருக்கு ரூ.80 ஆயிரம் அபராதம்
திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே வயலில் மின் வேலி அமைத்த 4 பேருக்கு வனத்துறையினர் தலா ரூ. 20,000 அபராதம் விதித்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே வயலில் மின் வேலி அமைத்த 4 பேருக்கு வனத்துறையினர் தலா ரூ. 20,000 அபராதம் விதித்தனர்.
கடையம் அருகே மயிலப்புரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராமசாமி, கடையம் திப்மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த வினைதீர்த்தான் மகன் வைத்தியலிங்கம், கடையம் மேட்டூர் அருகே அரியப்பபுரம் பகுதியை சேர்ந்த வைரவன், மயிலப்பபுரம் கிராமத்தை சேர்ந்த துரைபாண்டி மகன் நாகராஜன். இவர்கள் 4 பேரும் விவசாயம் செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடையம் அருகே விளை நிலங்கள் உள்ளன. இந்நிலங்களில் விளைப் பொருட்கள் பயிரிட்டுள்ளனர். வனவிலங்குகளிடம் இருந்து விளைப் பொருட்கள் சேதமடைந்து வருவதை தடுக்கும் வகையில் வயலை சுற்றிலும் மின்வேலி அமைத்திருந்தனராம்.
தகவலறிந்த வனத்துறையினர் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் சேகர் உத்தரவின்பேரில் உதவி வனபாதுகாவலர் ஆனந்தகுமார், கடையம் வனச்சரகர் இளங்கோ மற்றும் வனப்பணியாளர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர்.
இதையடுத்து மின்வேலி அமைத்த வைத்தியலிங்கம், ராமசாமி, வைரவன், நாகராஜன் ஆகியோருக்கு தலா ரூ. 20 ஆயிரம் வீதம் ரூ. 80 ஆயிரம் அபராதம் விதித்தனர்.