பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் ஓரிரு நாளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
புலிகள் சரணாலயங்களில் நிபந்தனைகளுடன் சுற்றுலா செல்ல அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பாபநாசம், மணிமுத்தாறு அணை, அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல ஓரிரு
புலிகள் சரணாலயங்களில் நிபந்தனைகளுடன் சுற்றுலா செல்ல அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பாபநாசம், மணிமுத்தாறு அணை, அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல ஓரிரு நாளில் அனுமதி வழங்கப்படும் என வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியாவில் 41 புலிகள் சரணாலயங்கள் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் திருக்குறுங்குடியில் இருந்து கடையம் வரை 895 சதுர கி.மீ பரப்பளவில் நாட்டின் 17 வது புலிகள் காப்பகமான களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு புலி, சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட அரிய வகை விலங்கினங்கள், உலகில் வேறு எங்கும் இல்லாத அரிய தாவர வகைகள் உள்ளன. பல்லுயிர் பெருக்கத்தற்கு புகழ் பெற்ற காப்பகம்.
நாட்டில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் புலிகள் சரணாலயங்களில் சுற்றுலா செல்ல உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 24 ம் தேதி தடை விதித்தது. இதையடுத்து களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் மூடப்பட்டது.
இங்குள்ள மணிமுத்தாறு, பாபநாசம் அணைகள், மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, காரையார் பாணத்தீர்த்த அருவி, களக்காடு செங்கல்தேரி பகுதிக்கு சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டது. இங்குள்ள கோயில்களுக்கு மட்டும் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை சில நிபந்தனைகளுடன் புலிகள் சரணாலயங்களில் சுற்றுலா செல்ல அனுமதிக்கலாம் என தெரிவித்துள்ளது. நீதிமன்றம் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அளித்து நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுலா செல்ல அனுமதிக்கலாம் என நீதிமன்றம் தெரிவி்த்துள்ளது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வகுத்துள்ள நெறிமுறைகள் குறித்த தகவல் கிடைத்ததும் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா செல்வது தொடர்பாக முடிவு செய்து அனுமதி வழங்கப்படும் என புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே இன்னும் ஓரிரு நாளில் அணை, அருவிகளுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.