பொள்ளாச்சியில் மர்மக் காய்ச்சலுக்கு சிறுமி பலி
பொள்ளாச்சியில் 2 வயது சிறுமி மர்மக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள தென்பண்ணம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவரது 2 வயது மகள் தருணிகா. கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில் காய்ச்சல் அதிகமானதை அடுத்து 2 நாட்களுக்கு முன்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று காலை அவரது நிலைமை கவலைக்கிடமானதை அடுத்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே தருணிகா உயிரிழந்தார்.
அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததா என்பது பிரேத பரிசோதனையில் தான் தெரிய வரும் என்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.