அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்!
அசாமில் வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதைத்தொடர்ந்து அமைச்சர் நந்திதா பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.
அசாமில் வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதைத்தொடர்ந்து அமைச்சர் நந்திதா பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.
அசாம் மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் அமைச்சர் நந்திதா கார்லோசா. இவர் 2021 பேரவைத் தேர்தலில் ஹாஃப்லாங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு நடைபெறவிருக்கும் பேரவைத் தேர்தலில் போட்டியிட பாஜக சார்பில் சீட் வழங்கப்படவில்லை. . இந்த முறை ஹாஃப்லாங் தொகுதியில் அவருக்குப் பதிலாக புதிய முகமான ரூபாலி லாங்தாசாவை வேட்பாளராக பாஜக களமிறக்கியுள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த அவர் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார். அசாம் மாநில காங்கிரஸ் ஊடகக் குழு, நந்திதா கார்லோசா ஹாஃப்லாங்கில் கட்சியில் இணைந்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, நந்திதாவின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார். ஆனால், இந்த சந்திப்பின் முடிவு குறித்து இருவரும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. 126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறுகிறது.
தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அமைச்சர் ஒருவர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.