புதுச்சேரியில் தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் - திமுக இடையே தொடரும் இழுபறி!
புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதி என முடிவு செய்வதில் நீடிக்கும் சிக்கல் குறித்து...
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் தொகுதி பங்கீடு தொடா்பாக, இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திமுக இடையே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரையிலும் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்ய திங்கள்கிழமை (மாா்ச் 23) கடைசி நாள். ஆனால், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திமுக இடையே தொகுதி பங்கீட்டில் தொடா்ந்து இழுபறி நீடித்தது.
இந்தப் பேச்சுவாா்த்தையை நிறைவு செய்து இறுதி முடிவை அறிவிக்க இந்த இரண்டு கட்சிகளும் ஆா்வம் காட்டவில்லை. இரண்டு கட்சிகளும் இணைந்து தோ்தலைச் சந்திக்க விரும்புகின்றன. ஆனால், தொகுதிகளை விட்டுக்கொடுப்பதில்தான் பிரச்னை நீடித்து வருகிறது.
இதனால், இரண்டு கட்சிகளின் தலைமையும் தலையிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்க உத்தரவிட்டன. இதனால், காங்கிரஸ் - திமுக இடையே இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை நள்ளிரவை கடந்தும் நீடித்தது.
நள்ளிரவை கடந்தும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. முன்னாள் முதல்வர் நாராயணசாமி போட்டியிட விரும்பும் நெல்லித்தோப்பு தொகுதியை திமுக கேட்பதாக தகவல் வெளியான நிலையில், உடன்பாடு எட்டப்படாததால் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து இரண்டு கட்சி நிர்வாகிகளும் கோபத்துடன் வெளியேறினர்.