ராமநதி அணை நிரம்புகிறது: பாசனத்திற்கு நவ.5 ல் திறப்பு
பருவ மழை பெய்து வருவதால் 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை நிரம்பி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அணையின் நீர்மட்டம் 80.75 அடியாக இருந்தது.
பருவ மழை பெய்து வருவதால் 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை நிரம்பி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அணையின் நீர்மட்டம் 80.75 அடியாக இருந்தது.
வடகிழக்கு பருவ மழை தொடங்கி பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை நிரம்பும் நிலையில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 80.75 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 15 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணை ஓரிரு நாளில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் 84 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணையின் நீர்மட்டம் 71.90 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 45.45 கனஅடி நீர்வரத்து இருந்தது. கடந்த சில தினங்களாக மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. கடனாநதி அணையில் மட்டும் 1 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 65.00 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 431.36 கனஅடி நீர்வரத்து இருந்தது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 78.61 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 57.65 அடியாகவும் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 136 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து பெருங்கால் மதகில் 20 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கார் பருவம் பொய்த்து விட்ட நிலையில் பிசான பருவ சாகுபடிக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாகுபடிக்காக அணைகளில் இருந்து நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும் என அணை வட்டாரங்கள் தெரிவித்தன.
நவ. 5 ம் தேதி திறப்பு:
பிசான சாகுபடிக்கு ராமநதி அணையில் இருந்து வரும் நவம்பர் மாதம் 5 ம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. ராமநதி அணை பாசனத்தில் 4944 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.