காரைக்காலில் 50 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல் - இருவர் கைது
காரைக்காலில் ரேஷன் கடையிலிருந்து 50 மூட்டை அரிசியை கடத்தியபோது பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்காலில் ரேஷன் கடையிலிருந்து 50 மூட்டை அரிசியை கடத்தியபோது பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்கால் சேத்திலால் நகர் பகுதியில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் துறையின் ரேஷன் கடையொன்று இயங்கி வருகிறது. இக்கடையில் விற்பனையாளராக மரியம் நகர் ஜெயராமன் மகன் சாய்ராம் (32) என்பவர் பணியாற்றி வந்தார்.
காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை இரவு கடுமையாக மழை பெய்துகொண்டிருந்த நேரத்தில் கடையிலிருந்து 50 கிலோ எடையுள்ள 50 அரிசி மூட்டைகள், சுமை ஆட்டோவில் பத்திரமாக ஏற்றப்பட்டு, நகரப் பகுதியை நோக்கி புறப்பட்டுள்ளது.
இதைப் பார்த்த அப்பகுதியினர் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடை திறந்து, அரிசி மூட்டை வெளியேறுவது சந்தேகத்துக்குரியதாகக் கருதி, வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். இவற்றை காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
நகரக் காவல்நிலைய போலீஸார் இவ்வழக்கை உணவு கலப்பட தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீஸார், ரேஷன் கடைக்கு சென்று விற்பனையாளர் சாய்ராமிடம் விசாரணை நடத்தினர். அப்போது காரைக்கால் பகுதியில் உள்ள அரிசிக் கடையொன்றுக்கு கடத்தப்படுவது தெரியவந்தது. சாய்ராமையும், சுமை ஆட்டோ ஓட்டுநர் மஸ்தான் பள்ளி வீதியை சேர்ந்த செல்வராஜ் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர். ஆட்டோ மற்றும் 50 மூட்டை அரிசியை பறிமுதல் செய்தனர்.