டெங்கு காய்ச்சலால் பாதித்த காரைக்கால் சிறுமி பலி
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காரைக்காலை சேர்ந்த சிறுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காரைக்காலை சேர்ந்த சிறுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
காரைக்கால் மாவட்டம் கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவரது மகள் மமதி (8). தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு, காரைக்காலில் உள்ள குழந்தை மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பிறகு இவருக்கு கடந்த 26- ம் தேதி டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பெற்றோர் இவரை உடனடியாக புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார். சிறுமியின் சடலம் காரைக்காலில் உள்ள அவரது வீட்டிற்கு அன்றிரவு கொண்டு வரப்பட்டது.
காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.என்.திருமுருகன் குழந்தையின் சடலத்திற்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட காரைக்காலை சேர்ந்தோர் காரைக்கால் அரசு மருத்துவமனையிலும், வீடுகளிலும், புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் நிகழ்ந்த முதல் பலி இதுவாகும்.