10ம் வகுப்பு தேர்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 39 பேர் பிடிபட்டனர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 39 பேர் பிடிபட்டதாக கல்வித் துறை அதிகாரிகள் கூறினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 39 பேர் பிடிபட்டதாக கல்வித் துறை அதிகாரிகள் கூறினர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தனித் தேர்வர்கள் 37 பேர் பிடிபட்டனர். பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட கல்வி அதிகாரி (நாட்டுப் பணித் திட்டம்) உஷாராணி தலைமியிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது, பிட் அடித்தல், பக்கத்தில் இருப்பவரைப் பார்த்து காப்பி அடித்தல் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட மாணவ மாணவியர் பிடிபட்டனர். அவர்கள் ஒரே மையத்தில், வெவ்வேறு தேர்வு அறைகளில் இருந்து பிடிபட்டனர். பின்னர் 37 பேரும் தேர்வு மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் சசிகலாவதி தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது, போளூர் டான்பாஸ்கோ பள்ளியில் ஒரு மாணவியும், அரசுப் பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு மாணவரும் சிக்கினர். இன்றைய பத்தாம் வகுப்பு ஆங்கில முதல்தாள் தேர்வில், திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 39 பேர் பிடிபட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.