சாத்தூர் : தனியார் அட்டை மில் கழிவுகளை அகற்றக் கோரி போராட்டம்
சாத்தூர் அருகே தனியார் அட்டை மில்லில் இருந்து வெளியேறும் கழிவுகளை அகற்றக் கோரி பந்துவார்பட்டி, அச்சன்குளம் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
சாத்தூர் அருகே தனியார் அட்டை மில்லில் இருந்து வெளியேறும் கழிவுகளை அகற்றக் கோரி பந்துவார்பட்டி, அச்சன்குளம் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
சாத்தூர் அடுத்த வெம்பகோட்டை அருகே விளாமரத்துப் பட்டியில் தனியார் அட்டை மில் உள்ளது. இந்த அட்டை மில்லில் இருந்து வெளியேறும் கழிவுகள் விளாமரத்துப்பட்டி கிராமத்தில் தேங்கியிருப்பதால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு விளாமரத்துப்பட்டி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் அட்டை ஆலையை இயக்கக் கூடாது எனவும், கழிவுகளை அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அட்டை மில்லில் உள்ள கழிவுகளை அகற்றி, ஊழியர்கள் அச்சங்குளம், பந்துவார்பட்டி கிராம குடிநீர் போகும் ஓடைகளில் கொட்டி விட்டனர். இதனால், குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது என்ற கூறி நேற்று இரவு கழிவுகளை அள்ளிக் கொண்டு வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து அச்சன்குளம் - பந்துவார்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சாத்தூர் தாசில்தார் சம்சுதீன், டிஎஸ்பி சின்னைய்யா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களிடம் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியலை கிராம மக்கள் கைவிட்டனர். இன்று முற்பகல் வரை கழிவுகள் அகற்றப்படவில்லை என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
இதே நிலை நீடித்தால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும், கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.