பயணிகளிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட ரயில்வே போலீஸார்!
திருட்டு மற்றும் விபத்து குறித்து சிதம்பரம் ரயில்வே போலீஸார் வெள்ளிக்கிழமை சிதம்பரம் ரயில்நிலையத்தில் பயணிகளுக்கு விழிப்புணர்வு
திருட்டு மற்றும் விபத்து குறித்து சிதம்பரம் ரயில்வே போலீஸார் வெள்ளிக்கிழமை சிதம்பரம் ரயில்நிலையத்தில் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் ரயிலில் மயக்க பிஸ்கட், குளிர்பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பயணிகளிடம் நகை மற்றும் பொருள்களை திருடுவதை தடுக்கவும், ரயில்பாதையை கடக்கும் போது ஏற்படும் விபத்துகளை தவிர்க்கவும் ரயில்வே போலீஸார் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டனர்.
இன்ஸ்பெக்டர் கே.கோவிந்தராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவானந்தம், பாண்டியன் மற்றும் போலீஸார் வெள்ளிக்கிழமை ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர். பயணத்தின் போது சந்தேகத்திற்கு இடமான நபர்கள் இருப்பின் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கேட்பாரற்று கிடக்கும் பொருள்களை தொடக்கூடாது. அதுகுறித்தும் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பொருட்களை வாங்கி உங்கள் பாதுகாப்பில் வைக்க வேண்டாம். வாகனம் நிறுத்துமிடத்தில் அநாதையாக நிற்கும் வாகனங்கள் பற்றி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பயணிகளுக்கு போலீஸார் அறிவுரை வழங்கினர்.