காரைக்காலில் மின் கம்பம் முறிந்து விழுந்து 2 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
காரைக்கால் மீராப்பள்ளித் தோட்டம் பகுதியை சேர்ந்த சாகுல்ஹமீது மகன் முகமது அசாருதீன். இவர் காரைக்கால் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவந்தார். பாரதியார் சாலையை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் குமரவேல். இவர் 6-ம் வகுப்பு படித்துவந்தார். டியூஷன் வகுப்பு செல்வதற்காக இருவர் தனித்தனி சைக்கிளில் சனிக்கிழமை பிற்பகல் பாரதியார் சாலையில் உள்ள டியூஷன் சென்டருக்கு சென்றனர்.
காரைக்காலில் மின் கம்பம் முறிந்து விழுந்ததில் சைக்கிளில் சென்ற இரு மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.
காரைக்கால் மீராப்பள்ளித் தோட்டம் பகுதியை சேர்ந்த சாகுல்ஹமீது மகன் முகமது அசாருதீன். இவர் காரைக்கால் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவந்தார். பாரதியார் சாலையை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் குமரவேல். இவர் 6-ம் வகுப்பு படித்துவந்தார். டியூஷன் வகுப்பு செல்வதற்காக இருவர் தனித்தனி சைக்கிளில் சனிக்கிழமை பிற்பகல் பாரதியார் சாலையில் உள்ள டியூஷன் சென்டருக்கு சென்றனர்.
அப்போது சாலையில் இருந்த இரும்பு மின் கம்பம் முறிந்து சைக்கிளில் சென்ற இவர்கள் மீது விழுந்தது. இதில் முகமது அசாருதீனுக்கு தலையில் பலத்த காயமடைந்தார். குமரவேலுக்கு கை, கால்களில் காயமேற்பட்டது. இருவரையும் அப்பகுதியினர் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு மருத்துவக் குழுவினர் இவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர். தகவல் அறிந்து காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம் மருத்துவமனைக்கு சென்று, மாணவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களை கேட்டுக்கொண்டு, அவர்களது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
மின் துறையின் அலட்சியம் : காரைக்காலில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள இரும்பினாலானது, காங்கிரீட் முறையிலும் நிறுவப்பட்டிருக்கும் மின் கம்பங்கள் சிதிலமடைந்தே காணப்படுகிறது. பல இடங்களில் முட்டுக் கொடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. இவைகளை கணக்கிட்டு புதிய மின் கம்பங்கள் பொருத்தவேண்டும். மக்களுக்கு எப்போதும் ஆபத்தை ஏற்படுத்துமென மாவட்ட நிர்வாகம், மின் துறையினரை பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் எந்த பயனும் இதுவரை ஏற்படவில்லை.