குமரியில் தடையை மீறி மீன்பிடித்த விசைப்படகில் இருந்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான மீன்கள் ஏலம்
கன்னியாகுமரி கடற்பகுதியில் தடையை மீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த சேரியா முட்டம் பகுதியைச் சேர்ந்த விசைப்படகில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரத்துக்கு வியாழக்கிழமை ஏலம் விடப்பட்டது.
கன்னியாகுமரி கடற்பகுதியில் தடையை மீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த சேரியா முட்டம் பகுதியைச் சேர்ந்த விசைப்படகில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரத்துக்கு வியாழக்கிழமை ஏலம் விடப்பட்டது.
மீன்பிடித் தடைகாலம் அமலில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் தடையை மீறி மீன்பிடிப்பவர்களை பிடிக்கும் வகையில் மீன்துறை அதிகாரிகள், கடலோர காவல் படையினர் மற்றும் மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதன்கிழமை அதிகாரிகள் மற்றும் மீனவர் குழுவினர் ரோந்து சென்ற போது தடை செய்யப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சேரியா முட்டம் பகுதி மீனவர்கள் 10 பேர் மற்றும் விசைப்படகினையும் பிடித்த அதிகாரிகள் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.
பிடித்து வரப்பட்ட 10 பேரையும் விடுவித்த அதிகாரிகள் விசைப்படகினையும் அதிலிருந்த மீன்களையும் பறிமுதல் செய்தனர். படகில் இருந்த மீன்கள் துறைமுக வளாகத்தில் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மீன்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது.
இந்த மீன்களை வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். மொத்தம் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டதாக உதவி இயக்குனர் தெரிவித்தார். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகிற்கு விரைவில் அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.