கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை: சிதம்பரம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
புவனகிரி காவல் நிலைய கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிதம்பரம் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது.
புவனகிரி காவல் நிலைய கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிதம்பரம் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது.
சிதம்பரம் அருகே உள்ள ஆதிவராகநல்லூரைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் கடந்த 9-8-2009ல் எதிர்வீட்டில் வசிக்கும் ராஜகுமாரியின் மகளை தாக்குவதை கேள்விபட்டு அங்கு சென்று சண்டையை விலக்கிவிட்டுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (55) வேல்முருகனை உருட்டை கட்டையால் தலையில் தாக்கியுள்ளார். மற்றொருவரான சீத்தாராமன் உருட்டை கட்டையால் வேல்முருகன், சிவா ஆகியோரை முதுகில் தாக்கியுள்ளார். இத்தாக்குதலில் வேல்முருகன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். இதுகுறித்து புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து சிதம்பரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். சிதம்பரம் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கு விசாரணை முடிவுற்று வியாழக்கிழமை நீதிபதி சுபாதேவி தீர்ப்பு அளித்தார். அரசு தரப்பில் வழக்குரைஞர் தேவதாஸ் வாதாடினார். எதிரி தரப்பில் வழக்குரைஞர் ஏ.சக்கரவர்த்தி ஆஜராஜி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பில் குற்றம் நிருபிக்கப்பட்டதால் முதல் குற்றவாளி சுந்தரமூர்த்திக்கு 6 மாத கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ஆயுள்தண்டனையும், அபராதம் ரூ.2ஆயிரம் விதித்தும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தும், குற்றம் நிருபிக்கப்பட்டாததால் 2-வது குற்றவாளி சீத்தாராமனை விடுதலை செய்தும் நீதிபதி சுபாதேவி தீர்ப்பளித்தார்.