சாத்தூரில் பச்சைப் பட்டுடுத்தி வைப்பாற்றில் இறங்கினார் கள்ளழகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடாச்சலபதி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமியின் முக்கிய நிகழ்ச்சியான வைப்பாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடாச்சலபதி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமியின் முக்கிய நிகழ்ச்சியான வைப்பாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
சாத்தூர் வெங்கடாச்சலபதி திருக்கோயிலில் இன்று காலை 8 மணிக்கு கள்ளழகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏழாயிரம் பண்ணை, இருக்கன்குடி, உவமேட்டுப்பட்டி, பெரியக்கொள்ளப்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை வணங்கிச் சென்றனர். பின்னர் குதிரை வாகனத்தில் கள்ளழகர் 4 மாட வீதி வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து, சாத்தூர் வைப்பாற்றில் இறங்கினர்.
ஆற்றில் இறங்கும் போது, கள்ளழகர் சாத்தியிருக்கும் பட்டாடையின் நிறத்தை வைத்து, நாட்டின் வளத்தை அறியலாம் என்பது நம்பிக்கை அதேப்போல, ஆழகர் பச்சைப் பட்டுடுத்தி மேல தாளத்துடன் வைப்பாற்றில் இறங்கினார்.
Advertisement
சாத்தூர் வைப்பாற்றில் இருந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்த பிறகு, சாத்தூர் அருகே உள்ள பெரியக்கொள்ளப்பட்டி ஜமீனுக்கு கள்ளழகரை கொண்டு செல்வது வழக்கம். அதனையொட்டி பெரியக்கொள்ளப்பட்டியில் வீதி உலா நடைபெறும். பின்னர் அங்குள்ள அரண்மனையில் உள்ள திருக்கண்ணில் இருந்து கள்ளழகர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
பெரியக் கொள்ளப்பட்டியில் வெள்ளிக்கிழமை இரவு வான வேடிக்கை நடைபெறும். அதனை கள்ளழகர் பார்த்துவிட்டு சனிக்கிழமை சாத்தூர் வெங்கடாச்சலபதி கோயிலுக்கு வருவார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளின் சார்பில் மோர்ப்பந்தலும், அன்னதானமும் அளிக்கப்பட்டது. மேலும் சாத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சின்னய்யா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.