எல்லையைக் காக்காத காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்யவேண்டும்: அர்ஜூன் சம்பத்
சீனா, நம்மிடம் அபகரித்த இந்திய எல்லையை காப்பாற்றாத காங்கிரஸ் அரசு உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன்சம்பத் தெரிவித்தார்.
சீனா, நம்மிடம் அபகரித்த இந்திய எல்லையை காப்பாற்றாத காங்கிரஸ் அரசு உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன்சம்பத் தெரிவித்தார்.
சிதம்பரம் இளமையாக்கினார் கோயிலுக்கு தனது 48 வது பிறந்தநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சீனா இந்தியாவின் வடக்கு எல்லையான லடாக் பகுதியை அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்துள்ளது. இந்தியஅரசு, சீன ராணுவத்தை வெளியேற்ற முயற்சி செய்யாமல் 100 கோடி இந்தியர்களை அவமானப்படுத்தியுள்ளது. ஆக்கிரமிப்பை மீட்காமல் பெய்ஜிங் சென்று சீனாவிடம், இந்தியஅரசு கெஞ்சி வருகிறது. நேரு காலத்திலிருந்து தவறான வெளியுறவுக் கொள்ளையினால் சீனா, இந்தியாவின் 46ஆயிரம் சதுர மைல் பரப்பளவை ஆக்கிரமித்துள்ளது. நமது புனித ஸ்தலமான கைலாய மலையை சீனாவிடம் உள்ளது. சிவபெருமான் இருக்கும் இடத்தை சீனா கைப்பற்றி வைத்துள்ளது. தற்போது சீனா, இந்திய எல்லையில் லடாக் பகுதியில் பல்வேறு கிராமங்களை கைப்பற்றியுள்ளது. இத்தகவலை இந்தியஅரசு நாடாளுமன்றத்தில் மறைக்க பார்க்கிறது. இதே போன்று இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபட்சேவிற்கு ஆதராக தமிழர்களை கொன்று குவிக்க இலங்கையில் சீன ராணுவம் உள்ளது. இலங்கையில் சீனா துறைமுகத்தை அமைத்துள்ளது. சீனா இந்தியாவின் தெற்கு எல்லையிலும், வடக்கு எல்லையிலும் ஊடுருவி உள்ளது. பாகிஸ்தான் கார்கில் பகுதியை ஆக்கிரமித்த போது வாஜ்பேயி அரசு உடனடியாக போர் தொடுத்து கார்கிலை மீட்டது. அதுபோன்று இந்திய அரசு சீனா மீது போர் தொடுத்து ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க வேண்டும். இதனை வலியுறுத்தியும். சீனாவை கண்டித்தும் தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர் அலுவலகம் முன்பு சீனக்கொடியை எரித்தும், சீனப் பொருள்களை புறக்கணித்தும் இந்து மக்கள் கட்சி சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஞாயிற்றுக்கிழமை உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சியினர் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக அர்ஜூன்சம்பத் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு இளமையாக்கினார் கோயிலில் நடைபெற்ற சிறப்புபூஜை மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சியில் அர்ஜூன்சம்பத் பங்கேற்றார். சொற்பொறிவிற்கு இந்து ஐக்கிய கூட்டமைப்பு கே.ஜே.கஜபதி வரவேற்றார். விழாக்குழுச் செயலாளர் ஆர்.வி.ஜெயசரவணன் தலைமை வகித்தார். ஆன்மீக சொற்பொழிவாளர் திருவையாறு வே.ரமணன் சிறப்புரையாற்றினார்.