விருதுநகரில் ரயில் நிலைய மேலாளர் பணியிடம் மீண்டும் வேண்டும்: கோரிக்கை
விருதுநகர் ரயில் நிலையத்தில் பொதுமக்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் வகையில் செயல்பட்டு வந்த ரயில் நிலைய மேலாளர் பணியினை தென்னக ரயில்வே நீக்கியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்பணியிடம் இல்லாததால் பொதுமக்கள் நாள்தோறும் சந்தித்து பாதிப்புகள் குறித்து தங்கள் துறைக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
விருதுநகர் ரயில் நிலையத்தில் ரயில் நிலைய மேலாளர் பணியிடத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என வியாபார தொழில் துறைச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தென்னக ரயில்வேயின் பொதுமேலாளருக்கு வியாபார தொழில் துறை சங்கத்தின் தலைவர் வி.வி.எஸ்.யோகன் அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:
விருதுநகர் ரயில் நிலையத்தில் பொதுமக்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் வகையில் செயல்பட்டு வந்த ரயில் நிலைய மேலாளர் பணியினை தென்னக ரயில்வே நீக்கியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்பணியிடம் இல்லாததால் பொதுமக்கள் நாள்தோறும் சந்தித்து பாதிப்புகள் குறித்து தங்கள் துறைக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
முதல் கட்டமாக ரயில் நிலையத்தில் எந்த நடைமேடையில் ரயில் வந்து சேரும் நேரமும், புறப்படும் நேரமும் தெரியாத நிலையிரு்க்கிறது. பயணிகள் பயணம் செய்யும் பெட்டி எண்களையும் அறிந்து கொள்ளுதல், பார்சல் ரயில் பெட்டிகள் நிற்கும் இடம் விவரம் ஆகியவை தெரியாத நிலையிருக்கிறது. அதேபோல் நடைமேடை, ரயிலில் பயணிகளிடையே ஏற்படும் பிரச்னைகளை சரி செய்யவும் முடியாமல் இருக்கிறது.
அதேபோல், நடைமேடையில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதை யாரிடம் முறையிடுவது என்பது தெரியாமலும், தாமதமாக வரும் ரயில் குறித்து அறிந்து கொள்ள முடியாத நிலையில் பொதுமக்கள் சிரமப்படும் சூழ்நிலை இருக்கிறது. எனவே இப்பணியிடம் இல்லாததால் பிரச்னைகளை சமாளிப்பது எப்படி என தெரியாத நிலையில் ரயில் பயணிகள் உள்ளனர். அதனால், மீண்டும் ரயில் நிலைய மேலாளர் பணியினை உடனே ஏற்படுத்த வேண்டும் என விருதுநகர் வியாபார தொழிற் சங்கத்தின் தலைவர் வி.வி.எஸ்.யோகன் தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.