நடத்தையில் சந்தேகம்: மனைவியை குத்தி கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர் கைது
பாளையங்கோட்டையில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை குத்தி கொலை செய்துவிட்டு, பெட்ரோல் ஊற்றி
பாளையங்கோட்டையில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை குத்தி கொலை செய்துவிட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ரவி (45). இவர், திருநெல்வேலியில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி லதா (42). இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு லெட்சுமி பிரியா (16) என்ற மகனும், கார்த்திக் (10) என்ற மகளும் உள்ளனர்.
திருநெல்வேலியில் வேலை செய்து வருவதை தொடர்ந்து ரவி கடந்த 5 ஆண்டுகளாக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் சுபம் காலனியில் வாடகை வீட்டில் குடும்பத்தோடு வசித்து வந்தார். இந்நிலையில் மனைவி லதாவின் நடத்தையில் ரவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். அதுபோல வியாழக்கிழமை காலை குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பிறகு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது ஆத்தி்ரமடைந்த ரவி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லதாவை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த லதா சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை எடுத்து லதா சடலத்தில் ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டாராம். இது குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் பாளையங்கோட்டை தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில் ஆய்வாளர் ராஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தாலுகா போலீஸார் வழக்கு பதிந்து, தப்பியோட முயன்ற ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.