முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் டெசோ ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலியில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக டெசோ அமைப்பு சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம்

Updated On : 8 ஆகஸ்ட் 2013, 4:19 pm IST
பகிர்:

திருநெல்வேலியில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக டெசோ அமைப்பு சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து, தி.மு.க. தீர்மானக்குழு தலைவர் பொன் முத்துராமலிங்கம் பேசியதாவது:

கடந்த 1987-ல் ஏற்பட்ட ராஜீவ் காந்தி- ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் 13-வது சட்டப்பிரிவு இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் பூர்வக்குடி மக்களான தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த சட்டப்பிரிவை மாற்றம் செய்ய இந்தியா- இலங்கை நாடுகளுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்படவேண்டும்.

Advertisement

Advertisement

ஆனால், இந்த சட்டப்பிரிவை திருத்தி அமல்படுத்த இலங்கை அரசு முயற்சி செய்து வருகிறது. தமிழர்களுக்கு உள்ள

உரிமைகளை பறிக்கும் வகையில் மாற்றம் செய்ய இலங்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை உலக நாடுகளை ஏமாற்றும் வேலை. இதனால் இலங்கை தமிழர் பிரச்னைக்கு அர்த்தப்பூர்வமான விடிவை காண முடியாது.

13-வது சட்டப்பிரிவை முழுமையாக அப்படியே அமல்படுத்த வேண்டும் என்பது தான் தி.மு.க. வின் நிலை. அதேநேரத்தில் இந்த 13-வது பிரிவை அமல்படுத்துவது இலங்கை தமிழர் பிரச்னைக்கு இறுதி தீர்வாக இருக்காது. ஒரு தற்காலிக தீர்வாக அமையும். இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் உலகம் முழுவதும் குடிபெயர்ந்துள்ள இலங்கை தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் தனி ஈழம் வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்வது தான் இலங்கை தமிழர் பிரச்னையில் இறுதி தீர்வாக அமையும்.

இந்த விசயத்தில் இந்திய அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது என்பது புரியவில்லை. இலங்கையில் முள்ளிவாய்க்கால் சம்பவத்தி்ற்கும், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் சாவுக்கும் இந்தியாவும் காரணம் என்ற விமர்சனம் இன்றும் இருக்கிறது.  எனவே, இலங்கை பிரச்னையில் இந்திய அரசு சரியான முடிவை எடுக்காவிட்டால் அந்த விமர்சனம் மேலும் வலுபெறும். அதனை அனைவரும் நம்ப வேண்டிய சூழ்நிலை வரும்.

எனவே, இலங்கை தமிழர்களை பாதுகாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தான் இந்த போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தை இந்தியா நிராகரிக்குமானால் அடுத்தகட்டமாக போராட்டங்களை நடத்த தலைவர் கருணாநிதி முடிவு செய்வார் என்றார் அவர்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்டச் செயலர் வீ. கருப்பசாமி பாண்டியன், பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் டி.பி.எம். மைதீன்கான், தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் இரா. ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலைராஜா, அப்பாவு, ரசாக்,  தணிக்கைக்குழு உறுப்பினர் சுப. சீத்தாராமன், வழக்குரைஞர் ரவீந்திரநாத்,  மாவட்ட அவைத் தலைவர் கிரகாம் பெல், மாநகர செயலர் அப்துல் வகாப்,  முன்னாள் துணை மேயர்கள் கா. முத்துராமலிங்கம், விஸ்வநாதபாண்டியன், மாநில மகளிரணி துணை செயலர் ராஜம் ஜான், மாநில ஆதித்திராவிடர் நலக்குழு துணைச் செயலர் சீனியம்மாள், மாவட்ட துணை செயலர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.