உள்ளத்தில் இருந்து எழுந்து வரும் அக்னிதான் எழுத்து: எழுத்தாளர் விமலா ரமணி
எழுத்தாளர் விமலாரமணி: நல்ல சிந்தனைகளை கேட்க இளைஞர்கள் கூட்டமாக காத்திருக்கின்றனர். சரியான பாதையை தேர்வு செய்ய அவர்களுக்கு மூத்தவர்கள் வழிகாட்ட வேண்டும். ஒருவரது பிறப்பால் அவருக்கான அடையாளம் கிடைக்காது. ஒருவரின் செயலால்தான் அவருக்கு அடையாளம் கிடைக்கும். நல்ல வாழ்க்கை கிடைக்க நல்ல சிந்தனை அவசியம். நல்ல சிந்தனைக்கு நல்ல வாசிப்பு தேவை. நல்ல வாசிப்புக்கு நல்ல புத்தகங்கள் அவசியம். மாற்றி யோசித்தால் சிந்தனை தானாக தேடி வரும். உள்ளத்தில் இருந்து வரும் அக்னி தான் எழுத்து. ஒரு வழக்குரைஞரின் மகன் வழக்குரைஞர் ஆக முடியும். ஓர் அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதி ஆக முடியும். ஆனால், ஓர் எழுத்தாளரின் மகன் எழுத்தாளராக மாற முடியாது. எழுத்தாளருக்கு சிந்தனை மிகவும் அவசியம். ஒவ்வொரு மனிதரின் சிந்தனையும் மாறுபடும் என்றார்.
உள்ளத்தில் இருந்து எழுந்து வரும் அக்னி தான் எழுத்து என்று மூத்த பெண் எழுத்தாளர் விமலாரமணி கூறினார்.
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடத்தப்பட்டு வரும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் 10-வது நாள் சிந்தனை கருத்தரங்கில் மூத்த பெண் படைப்பாளிகள் ஜோதிர்லதா கிரிஜா, இந்துமதி, சிவசங்கரி, விமலாராணி, கவிஞர் இரா.மீனாட்சி ஆகியோர் பாராட்டப்பட்டனர்.
விழாவில் மூத்த படைப்பாளிகள் பேசியதாவது:
எழுத்தாளர் விமலாரமணி: நல்ல சிந்தனைகளை கேட்க இளைஞர்கள் கூட்டமாக காத்திருக்கின்றனர். சரியான பாதையை தேர்வு செய்ய அவர்களுக்கு மூத்தவர்கள் வழிகாட்ட வேண்டும்.
ஒருவரது பிறப்பால் அவருக்கான அடையாளம் கிடைக்காது. ஒருவரின் செயலால்தான் அவருக்கு அடையாளம் கிடைக்கும். நல்ல வாழ்க்கை கிடைக்க நல்ல சிந்தனை அவசியம். நல்ல சிந்தனைக்கு நல்ல வாசிப்பு தேவை. நல்ல வாசிப்புக்கு நல்ல புத்தகங்கள் அவசியம்.
மாற்றி யோசித்தால் சிந்தனை தானாக தேடி வரும். உள்ளத்தில் இருந்து வரும் அக்னி தான் எழுத்து. ஒரு வழக்குரைஞரின் மகன் வழக்குரைஞர் ஆக முடியும். ஓர் அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதி ஆக முடியும். ஆனால், ஓர் எழுத்தாளரின் மகன் எழுத்தாளராக மாற முடியாது. எழுத்தாளருக்கு சிந்தனை மிகவும் அவசியம். ஒவ்வொரு மனிதரின் சிந்தனையும் மாறுபடும் என்றார்.
எழுத்தாளர் இந்துமதி: எழுத்தும் தெய்வம். எழுதுகோலும் தெய்வம் என்றார் பாரதி. அப்படி பார்க்கும்போது புத்தகத் திருவிழாகூட தெய்வத்திருவிழா எனக்கூறலாம். நான் குழந்தை பருவத்தில் இருந்தபோது வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருந்த எனது 80 வயது பாட்டி வீட்டில் 1,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கும். அவற்றை எனது பாட்டி உரக்க வாசிக்க சொல்வார். அப்போது தான் எனக்கு இலக்கிய ஆர்வம் ஏற்பட்டது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு புத்தகங்களை பொக்கிஷமாக வைத்துவிட்டுச்செல்ல வேண்டும். அன்பை மனதில் வளர்க்க வேண்டும். அன்பு இருந்தால்போதும் வாழ்வில் சாதித்துவிடலாம் என்றார்.
எழுத்தாளர் சிவசங்கரி: இந்தியாவிலேயே மிகப்பெரிய புத்தகக் கண்காட்சி ஜெய்ப்பூரில்தான் நடக்கிறது. அதேபோல கொல்கத்தா, புதுதில்லி, நெய்வேலி, சென்னை உள்பட பல புத்தகக் கண்காட்சிக்கு சென்று வருகிறேன். ஆனால், இதுபோன்ற இலக்கிய ஆர்வம் கொண்ட கூட்டத்தை பார்த்ததில்லை. புத்தகம் வாசிக்கும்போது பிற சிந்தனைகளை கைவிட்டு, புத்தகத்தில் இருக்கும் கருத்துக்களை முழுமையாக உள்வாங்க வேண்டும். நல்ல கருத்துக்களை உள்வாங்கும்போது நல்ல சிந்தனைகள் பிறக்கும். 1970, 1980-களில் இலக்கியவாதிகள் குறிப்பாக பெண் படைப்பாளிகள், தலித் இலக்கிய படைப்பாளிகள் கோலோச்ச தொடங்கினர். காட்சி ஊடகங்கள் வந்தபோதும் இப்போதும் வாசிப்பு பழக்கம் குறையவில்லை என்றார்.
இக்கருத்தரங்கில் எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா, கவிஞர் இரா.மீனாட்சி ஆகியோரும் சிறப்புரை ஆற்றினர். கருத்தரங்கில் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், எம்.பி. நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரித் தாளாளர் வசந்தா சுத்தானந்தன், யாளி நிறுவனங்களின் தலைவர் எழிலரசி உள்பட பலர் பங்கேற்றனர்.