முகப்பு
தற்போதைய செய்திகள்

துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் பாலம் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ்

சென்னை துறைமுகத்தின் வளர்ச்சிக்காகவும், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும் சென்னை மதுரவாயல் முதல் துறைமுகம் வரை 19 கி.மீ தொலைவுக்கு பறக்கும் சாலை

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் பாலம் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை துறைமுகத்தின் வளர்ச்சிக்காகவும், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும் சென்னை மதுரவாயல் முதல் துறைமுகம் வரை 19 கி.மீ தொலைவுக்கு பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டது. அத் திட்டத்துக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். திட்டமிட்டபடி பணிகள் நடைபெற்றிருந்தால் இந்நேரம் பணிகள் முடிவடைந்து அப்பாலத்தில் போக்குவரத்து தொடங்கியிருக்கும். ஆனால், கடந்த 2011-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு உள்ளூர் அரசியல் மோதல்களை மனதில் வைத்துக் கொண்டு இத்திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டது. 10 சதவீத பணிகள் கூட முடிவடையாத நிலையில் இத்திட்டம் தடைபட்டதால் இதுவரை ரூ.872 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அளவு இழப்பீட்டைச் செலுத்துவது சாத்தியமல்ல என்பதால் இத் திட்டத்தை கைவிடலாமா என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

இத்திட்டம் கைவிடப்படும் ஆபத்து இருப்பதால் சென்னை துறைமுகத்தில் ரூ.3,686 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ள மெகா சரக்குப் பெட்டக முனையம் அமைக்கும் திட்டமும், திருப்பெரும்புதூர் அருகில் ரூ. 415 கோடியில் உலர் துறைமுகம் அமைக்கும் திட்டமும் தடைப்பட்டுள்ளன. மதுரவாயல்-துறைமுகம் இடையிலான பறக்கும் பாலத்தை அடிப்படையாக வைத்து தான் இந்த இரு திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதால், தமிழக அரசின் தடை காரணமாக மொத்தம் சுமார் ரூ. 6ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்கள் கைவிடப்படக்கூடும். இதனால் சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, சென்னை துறைமுகத்தின்  விரிவாக்கமும், தமிழகத்திலிருந்து செய்யப்படும் ஏற்றுமதிகளும் பாதிக்கப்படும். இது தமிழகத்தின்  வளர்ச்சியிலும், வேலை வாய்ப்பு உருவாக்கத்திலும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் பாலத் திட்டம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தான் அதற்கு தடை விதித்திருப்பதாக தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது. ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய கூடங்குளம் அணு உலைத் திட்டத்துக்கும், கல்பாக்கம் அணுமின் திட்ட விரிவாக்கத்துக்கும் ஒப்புதலும், ஒத்துழைப்பும் அளித்த தமிழக அரசு, சாதாரண பாலம் அமைக்கும் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுவிடும் என்று கூப்பாடு போடுவது விந்தையாக உள்ளது.இவை மட்டுமின்றி, எண்ணூர்- மணலி சாலை மேம்பாட்டுத் திட்டம், திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், திருச்சி-கரூர் சாலைத் திட்டம், திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலைத் திட்டம் உள்ளிட்ட மேலும் 7 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களும் தமிழக அரசின் ஒப்புதல் கிடைக்காததால்  இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளன. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள இத்திட்டங்கள் முடக்கப்பட்டிருப்பதால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும். 

எனவே, மாநிலத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த திட்டங்கள் அனைத்துக்கும் போடப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை அகற்றி, இவற்றை விரைந்து செயல்படுத்த மத்திய அரசுக்கு மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்.மத்திய - மாநில அரசுகள் ஒன்றுக்கொன்று உறுதுணையாக செயல்பட்டால் தான் நாட்டில் முன்னேற்றம் ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →