ஆக.19-ல் சிதம்பரம் ஸ்ரீநடராஜப்பெருமானுக்கு மகாபிஷேகம், மகா ருத்ரஜபம், ருத்ர ஹோமம்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு வருகிற ஆக.19-ம் தேதி திங்கள்கிழமை மாலை மகாபிஷேகம் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு முன்னதாக மகா ருத்ரஜபம்,
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு வருகிற ஆக.19-ம் தேதி திங்கள்கிழமை மாலை மகாபிஷேகம் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு முன்னதாக மகா ருத்ரஜபம், மகா ருத்ர ஹோமம் நடைபெறுகிறது.
ஸ்ரீநடராஜர் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மார்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது தொன்று தொட்டு வழக்கமாகும். ஆனித்திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரியஉதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டின் மூன்றாவது மகாபிஷேகம் வருகிற திங்கள்கிழமை (19-08-2013 ) மாலை 6 மணிக்குமேல் நடைபெற இருக்கிறது. ஆவணி மாத வளர்பிறை சதுர்த்திசி அன்று (ஆவணி அவிட்டம் பூணூல் அணிந்து கொள்ளும் நாள்) ஸ்ரீநடராஜப்பெருமானுக்கு மந்திரம் சொல்லி பூணூல் அணிவித்து வெந்நீரால் மகாபிஷேகம் நடைபெறுகிறது.
மகாபிஷேகத்தை முன்னிட்டு திங்கள்கிழமை காலை 8 மணிக்குள் பகல் உச்சிகால பூஜை வரை நடைபெற்று ஸ்ரீ நடராஜப்பெருமான் மற்றும் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள் சித்சபையிலிருந்து கனகசபை எழுந்தருளுகிறார். பின்னர் கிழக்கு கோபுரத்தின் அருகில் சிறப்பு யாகசாலை அமைக்கப்பட்டு மகாருத்ர ஜபம், ருத்ர ஹோமம் ஆகியவை பொதுதீட்சிதர்களால் நடத்தப்படுகிறது. அதனை தொடர்ந்து மாலை கனகசபையில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப்பெருமானுக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.