முகப்பு
தற்போதைய செய்திகள்

தாது மணல் முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க மீனவர் ஐக்கிய முன்னணி வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகார் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை நடத்த வேண்டும் என மீனவர் ஐக்கிய முன்னணி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:21 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகார் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை நடத்த வேண்டும் என மீனவர் ஐக்கிய முன்னணி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட மீனவர் ஐக்கிய முன்னணி செயலர் சுபாஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:

தாது மணல் முறைகேடாக அள்ளப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவினர் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஆய்வு நடத்த வேண்டும் என மீனவர் ஐக்கிய முன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டபோதிலும் இதுவரை எந்தவித பதிலையும் அரசுத் தரப்பு தெரிவிக்கவில்லை.எனவே, தாது மணல் முறைகேடு தொடர்பாக மத்திய அரசு உடனடியாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி, உள்துறை அமைச்சகத்துக்கும், சிறப்பு புலனாய்வுத் துறைக்கும் மனு அனுப்பியுள்ளோம்.

அரசு விதிப்படி கடலோர பகுதியில் ஒரு அடிக்கு மேல் தாது மணல் அள்ளக்கூடாது. கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவில்தான் மணல் அள்ள வேண்டும். ஒரு அடிக்குள் மணல் அள்ளிவிட்டு, அதனை மீண்டும் சமநிலைப் படுத்த வேண்டும், மணல் அள்ள இயந்திரங்களை பயன்படுத்தக்கூடாது  என அரசு உத்தரவு உள்ளது. ஆனால் இந்த விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. தாது மணல் முறைகேடு புகார் தொடர்பாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவினர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால் மத்திய அரசின் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார் அவர்.

பேட்டியின்போது,  மீனவர் ஐக்கிய முன்னணி அமைப்பின் மாவட்ட தலைவர் சேவியர் வாஸ், பொருளாளர் ஜாய் காஸ்ட்ரோ, துணைத் தலைவர்கள் ஏடிஎஸ் அருள், சகாயராஜா, இசக்கிமுத்து, இணைச் செயலர்கள் ஜெயந்த் ராஜ், மாரியப்பன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரிச்சர்டு தேவசகாயம் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.