தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு: பழுது சரி செய்யும் பணி தீவிரம்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு மூன்று மற்றும் ஐந்தாவது யூனிட்டுகளில ஏற்பட்ட பழுது காரணமாக 420 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு மூன்று மற்றும் ஐந்தாவது யூனிட்டுகளில ஏற்பட்ட பழுது காரணமாக 420 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இந்த யூனிட்டுகள் மூலம் தினமும் ஏறத்தாழ 1050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக அடிக்கடி ஏற்பட்டு வரும் பழுது காரணமாக மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அனல் மின் நிலையத்தின் 3–வது யூனிட்டில் வெள்ளிக்கிழமை இரவு 6 மணியளவில் திடீரென பழுது ஏற்பட்டது. கொதிகலனில் ஏற்பட்ட பஞ்சர் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் 5-வது யூனிட்டிலும் பழுது ஏறபட்டது.
5-வது யூனிட்டில் கொதிகலனுக்குச் செல்லும் முன் நிலக்கரியை சூடுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின்விசிறியில் பழுது ஏற்பட்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், மொத்தம் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 3 மற்றும் 5–வது யூனிட்டில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அனல் மின் நிலைய தலைமைப் பொறியாளர் எஸ். வள்ளியப்பன் கூறியது:
அனல் மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 27-ம் தேதி இருக்குள் பழுதுகள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. அனல் மின் நிலையத்தில் சனிக்கிழமை இரவு நிலவரப்படி ஏறத்தாழ 610 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்றார்.