ரயில் நிலைய டிக்கட் கவுண்டர் மூடிக்கிடந்ததால் டிக்கட் எடுக்காமல் ஏறிச்சென்ற பயணிகள்
சிதம்பரம் ரயில்வே நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்கு மேல் டிக்கட் கவுண்டர்கள் மூடப்பட்டிருந்ததால் பயணிகள் டிக்கட் எடுக்காமல் அவதியுற்றனர். அதன் பின்னர் டிக்கட் எடுக்காமலேயே
சிதம்பரம் ரயில்வே நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்கு மேல் டிக்கட் கவுண்டர்கள் மூடப்பட்டிருந்ததால் பயணிகள் டிக்கட் எடுக்காமல் அவதியுற்றனர். அதன் பின்னர் டிக்கட் எடுக்காமலேயே ரயிலில் ஏறி பயணம் செய்தனர்.
சிதம்பரம் ரயில்வே நிலையத்தில் மொத்தம் 3 டிக்கட் கவுண்டர்கள் உள்ளது. இதில் ரிசர்வேஷன் கவுண்டர் ஒன்றும், மீதமுள்ள இருகவுண்டர்கள் பயணிகளுக்கு டிக்கட் கவுண்டர்களாகும். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ரிசர்வேஷன் கவுண்டர் மூடப்பட்டது. பயணிகளுக்கு இரண்டு டிக்கட் கவுண்டர்களில் ஒரு கவுண்டரில் பணியாற்றுபவர் விடுமுறையில் உள்ளதால் அந்த கவுண்டர் திறக்கப்படவில்லை. மீதமுள்ள ஒருகவுண்டரில் பணியாற்றிவருபவரும் உடல்நிலை சரியில்லை எனக்கூறி மதியம் 2.30 மணிக்கு கவுண்டரை பூட்டிவிட்டுச் சென்று விட்டார்.
ஒட்டுமொத்தமாக அனைத்து கவுண்டர்களும் மூடப்பட்டதால் விழுப்புரம்-மயிலாடுதுறை தடத்தில் செல்லும் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கட் எடுக்க முடியாமல் அவதியுற்றனர். பின்னர் மயிலாடுதுறை ரயில்வே நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது டிக்கட் எடுக்காமல் ஏறி வந்து இங்கு வந்து டிக்கட் எடுத்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். இதனால் மாலை 3 மணிக்கு மேல்த சென்னை-காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில், மயிலாடுதுறை- விழுப்புரம் பாசஞ்சர், விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர், பெங்களூர்-காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய ரயில்களில் பயணிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் டிக்கட் எடுக்காமலேயே ஏறி சென்றனர். இதனால் சிதம்பரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.