இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினரால் தூர் வாரப்பட்ட தீர்த்தக் குளங்கள் நிரம்பியதால் மக்கள் மகிழ்ச்சி
80 ஆண்டுகளுக்கு பிறகு சிதம்பரம் நகரில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரால் தூர்வாரப்பட்ட நடராஜர் கோயில் தீர்த்த குளங்கள் நீர் நிரம்பி காட்சியளிப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
80 ஆண்டுகளுக்கு பிறகு சிதம்பரம் நகரில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரால் தூர்வாரப்பட்ட நடராஜர் கோயில் தீர்த்த குளங்கள் நீர் நிரம்பி காட்சியளிப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சிதம்பரத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர வழிவகுக்கும் வகையில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் நகரில் உள்ள 12 குளங்களை தூர்வாரும் பணியில் இறங்கினர். முதல் கட்டமாக நகராட்சி நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் நகரில் உள்ள அண்ணாகுளம், யானைகுளம், ஓமக்குளம், இளமையாக்கினார் கோயில் குளம், தில்லையம்மன்கோயில் குளம் ஆகியவற்றை தூர்வாரினர். இதற்கு தொண்டு நிறுவனங்கள், சமூகஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டு ஆதரவாக பணியில் ஈடுபட்டனர்.
தூர்வாரிய குளங்களுக்கு நீர்வரும் வாய்க்கால் பாதைகள் முற்றிலும் தூர்ந்து போய் இருந்ததால் நீர் வரத்து இல்லாமல் இருந்தது. நீர் வரும் பாதையையும் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் சமூகஆர்வலர்கள் உதவியுடன் தூர்வாரினர். இதனால் சமீபத்தில் பெய்த தொடர் கனமழையில் அனைத்து குளங்களிலும் நீர்நிரம்பி காட்சியளிக்கிறது. நீண்ட வருடங்களுக்கு பிறகு தீர்த்தகுளங்கள் நீர் நிரம்பி காட்சியளிப்பதை பார்த்து பொதுமக்கள் மிக்க மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன் தெரிவித்தது: சிதம்பரம் நகரில் உள்ள தீர்த்தகுளங்கள் மற்றும் நீர்வரத்து வரும் வாய்க்கால் தற்காலிகமாக எங்கள் அமைப்பினர் மற்றும் சமூகஆர்வலர்கள் உதவியுடன் தூர்வாரப்பட்டது. இதனால் நாகச்சேரி குளம், ஓமக்குளம், யானை மேட்டுக்குளம் ஆகிய மூன்று குளங்களும் நிரம்பி 9 கோடி லிட்டருக்கு மேல் நீர் சேமிக்கப்பட்டுள்ளது. மேலும் தில்லையம்மன் கோயில் குளம் தற்போது நிரம்பி வருகிறது என மு.செங்குட்டுவன் தெரிவித்தார்.