புலிகள் கணக்கெடுப்பு நாளை தொடக்கம்: பாபநாசம், மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை
களக்காடு முண்டன்துறை காப்பகத்தில் புலிகள் உள்ளிட்ட விலங்கினங்கள் கணக்கெடுக்கும் பணி நாளை (திங்கள்கிழமை) தொடங்குவதால் மணிமுத்தாறு, பாபநாசம் அருவிகள் உள்ளிட்ட தலங்களுக்கு சுற்றுலா
களக்காடு முண்டன்துறை காப்பகத்தில் புலிகள் உள்ளிட்ட விலங்கினங்கள் கணக்கெடுக்கும் பணி நாளை (திங்கள்கிழமை) தொடங்குவதால் மணிமுத்தாறு, பாபநாசம் அருவிகள் உள்ளிட்ட தலங்களுக்கு சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம், திருநெல்வேலி வனக்கோட்டத்தில் உள்ள தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள்,சிறுத்தை மற்றும் பிற விலங்கினங்கள் குறி்த்த கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கி வரும் 23 ம் தேதி வரை நடைபெறுகிறது.
புலிகள் காப்பகத்தில் களக்காடு, அம்பாசமுத்திரம் கோட்டங்களில் 45 பீட்டுகளாக பிரித்து கணக்கெடுக்கப்படுகிறது. 2 கி.மீ வரை நேர்கோட்டுப் பாதை அமைத்து ஒவ்வொரு பாதைக்கும் 5 பேர் கொண்ட குழுக்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர். உயிரினங்களை நேரடியாகவும், மறைமுக தடயங்கள், வனவகை, நில வகை மற்றும் தாவர வகைகள் குறித்தும் கணக்கெடுக்கப்படுகிறது.
இக்கணக்கெடுப்பு முதல் கட்டமாக தகவல்கள் சேகரித்தல், 2 ஆவது கட்டமாக செயற்கைகோள் உதவியுடனும், 3 ஆவது கட்டமாக நவீன கேமிராக்கள் மூலமாகவும், 4 ஆம் கட்டமாக புலிகள் காப்பகங்களில் ஏற்கனவே உள்ள தகவல்கள் அடிப்படையிலும் என 4 கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது.
கணக்கெடுப்பை முன்னிட்டு திங்கள்கிழமை முதல் வரும் 21 ம் தேதி (சனிக்கிழமை) வரை 6 தினங்கள் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, களக்காடு செங்கல்தேரி உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கும், சுற்றுலா சார்ந்த இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு்ள்ளதாக புலிகள் காப்பக கள இயக்குநரும், தலைமை வனப்பாதுகாவலருமான மிட்டாபேனர்ஜி தெரிவித்தார்.