நாகை தாலூகா மீனவர்கள் வரும் 21-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்களை விடுவிக்கக் கோரி நாகை வட்டத்துக்குள்பட்ட மீனவக் கிராம மீனவர்கள் வரும் 21-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்களை விடுவிக்கக் கோரி நாகை வட்டத்துக்குள்பட்ட மீனவக் கிராம மீனவர்கள் வரும் 21-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வதென நாகை வட்ட மீனவப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாகையிலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 110 பேரையும், அவர்களின் 15 விசைப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் கடந்த 11-ம் தேதி சிறைப்பிடித்தனர்.முல்லைத்தீவு அருகே சட்ட விரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் குற்றம் சாட்டி, கடந்த 12-ம் தேதி திரிகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, டிச. 11-ம் தேதி முதல் நாகை அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விசைப் படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாகை வட்ட மீனவப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டத்தில், நாகை வட்டத்துக்குள்பட்ட 8 கிராம விசைப் படகு மீனவர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்வது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானப்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நாகை வட்டத்துக்குள்பட்ட 8 கிராம விசைப் படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பது குறித்து நாகை வட்ட மீனவப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டம், நாகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி டிச. 21-ம் தேதி முதல் நாகை வட்டத்துக்குள்பட்ட 8 கிராம மீனவர்களும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது. இந்தப் போராட்டத்துக்கு நாகை, காரைக்கால், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் ஆதரவைக் கோருவது. டிச. 21-ம் தேதி முதல் நாகை வட்டத்துக்குள்பட்ட அனைத்து மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.