5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புகளில் பட்டங்கள் பிரித்து வழங்க பாஜக கோரிக்கை
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்ட படிப்புகளில், இளங்கலை, முதுகலை என படிப்புகளை பிரித்து பட்டங்களை வழங்க வேண்டும் என கடலூர்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்ட படிப்புகளில், இளங்கலை, முதுகலை என படிப்புகளை பிரித்து பட்டங்களை வழங்க வேண்டும் என கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொருளாளர் வே.ராஜரத்தினம் தமிழகஅரசு உயர் கல்வித்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்படும் எம்ஏ., எம்எஸ்சி 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள் படித்தவர்கள் இளங்கலை பட்டம் வழங்கப்படாததால் வேலை கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு படிவத்தை ஆன்மூலம் பெற்று விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்ட படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பித்தால், இளங்கலை பட்டம் படித்ததற்கான சான்றிதழ் கட்டாயமாக கேட்கப்படுகிறது. விணணப்பத்தில் அதனை பூர்த்தி செய்யவில்லை எனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து தமிழக ஆளுநர், அரசு உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோருக்கு 4-9-2010ல் கடிதம் அனுப்பினோம். அதற்கு ஆளுநர் செயலர் கடந்த 4-9-2010 தேதியிட்ட பதில் தெரிவித்து அனுப்பியுள்ள கடிதத்தில் உயர்கல்வித்துறையில் தங்களது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார். ஆனால் இன்றைய தேதி வரை எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. எனவே தமிழகஅரசு உயர்கல்வித்துறை உடனடியாக தலையிட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக நடத்தும் எம்ஏ., எம்எஸ்சி 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள் பல்கலைக்கழக மானியக்குழு விதி செக்க்ஷன் 22-ல் அறிவிக்கப்படவில்லை எனில் அப்படிப்புகள் நடத்துவதை நிறுத்தும்படியும், பழைய மாணவர்களுக்கு மாநில அமைச்சரவையில் தீர்மானம் கொண்டு வந்து மாணவர்கள் நலன் கருதி முன் தேதியிட்டு இளங்கலை, முதுகலை என பட்டங்களை பிரித்து வழங்கிட வேண்டும் என வே.ராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.