முகப்பு
தற்போதைய செய்திகள்

பாலியில் புகார் எதிரொலி: பாதிரியார் இடைநீக்கம்

பாலியல் புகாருக்கு ஆளான, திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்த பாதிரியார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவல் வாடிகன் நகரத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:23 PM
பகிர்:

பாலியல் புகாருக்கு ஆளான, திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்த பாதிரியார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவல் வாடிகன் நகரத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பேட்டையில் அந்தோனியார் ஆலயம் உள்ளது. இங்கு பாதிரியாகப் பணியாற்றி வந்த செல்வன் என்ற பி.ஞானப்பிரகாசம் அந்தோனி செல்வன் (35) , பிளஸ்-1 மாணவியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதாகக் கூறப்படுகிறது.  இவ் வழக்கு தொடர்பாக உத்தமபாளையம் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சரணடைந்த செல்வம், மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அவரை இடைநீக்கம் செய்து பாளையங்கோட்டை மறைமாவட்டம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஆ.ஜூடுபால்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி பேட்டை பங்குப் பணியாளர் பி.ஞானப்பிரகாசம் அந்தோனி செல்வன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும், அதன் பின்னணியில் எழுந்துள்ள விமர்சனங்களும் திருச்சபையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்துள்ளன. பாலியல் வன்முறை, கருக்கலைப்பு போன்ற குற்றங்கள் வன்மையான கண்டனத்திற்கு உரியன. இச் செயல்கள் கிறிஸ்துவின் போதனைகளுக்கும், திருச்சபையின் சட்டங்களுக்கும், மனித சமுதாயத்திற்கும் அரசுச் சட்டங்களுக்கும் எதிரானவையாகும்.

நடந்தேறிய நிகழ்வுகள் மிகவும் வருத்தத்திற்குரியவை. இவை இதயத்தில் வலியையும், ஆறாத வடுவையும் ஏற்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்நிகழ்வுகளின் பின்னணியில் திருச்சபைச் சட்டத்தின்படி கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

பேட்டை பங்கின் அருள்பணிப் பொறுப்புகளில் இருந்தும், பள்ளிகளின் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்தும் செல்வன் விடுவிக்கப்படுகிறார். இப் பணியை பாளை மறைவட்ட அதிபர் பொறுப்பேற்றுள்ளார்.

காவல் துறையினரால் முதல் குற்ற அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குருத்துவப் பணியில் இருந்து செல்வன் இடைநீக்கம் செய்யப்படுகிறார். திருச்சபைச் சட்டம் 1333-ன்படி திருப்பலி, திருவருட்சாதனங்கள் போன்றவற்றை பொது இடங்களில் அவர் நிறைவேற்ற முடியாது.

இத்தகைய பிரச்னைகளைக் கையாளும் விதமாக செல்வன் மீதான முதல்நிலை அறிக்கை வாடிகன் நகருக்கு அனுப்பப்பட்டுள்ளது. செல்வன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் நீதிமன்றத்தால் நிரூபணமானால், வாடிகன் அவருக்கு மிகக் கடுமையான தண்டனைகளை வழங்கும். இவ் வழக்கில் நீதி நிலைநாட்டப்படும். இதுதொடர்பாக நேர்மையான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு திருச்சபையின் தரப்பிலிருந்து தரப்படும் என்பதை உறுதி செய்கிறோம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →