முகப்பு
தற்போதைய செய்திகள்

முன் பணத்தை திருப்பிக் கேட்டதில் தகராறு: வீட்டு உரிமையாளர் அடித்துக் கொலை

சேலம் நரசோதிப்பட்டி பகுதியில் வீட்டுக்கு வழங்கிய முன் பணத்தை திருப்பிக் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் வீட்டின் உரிமையாளர் ஞாயிற்றுக்கிழமை அடித்துக் கொல்லப்பட்டார்.இது குறித்து போலீஸ்

Updated On : 22 டிசம்பர், 2013 at 8:39 PM
பகிர்:

சேலம் நரசோதிப்பட்டி பகுதியில் வீட்டுக்கு வழங்கிய முன் பணத்தை திருப்பிக் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் வீட்டின் உரிமையாளர் ஞாயிற்றுக்கிழமை அடித்துக் கொல்லப்பட்டார்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

நரசோதிப்பட்டி பெருமாள் மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் நஞ்சப்பன் மகன் செல்வராஜ் (45). இவருக்கு பிரேமா (36) என்ற மனைவியும் கல்லூரியில் பயிலும் தினேஷ் (20), பிளஸ்-2 பயிலும் சுரேந்தர் (18) என்ற மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் செல்வராஜ் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு 4 வீடுகள் கட்டியுள்ளார். அதில் 3 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்த நிலையில் மாடியில் உள்ள ஒரு வீட்டில் டீ விற்கும் தொழிலாளி மாதேஷ் (33) என்பவர் 6 மாதங்கள் குடியிருந்துள்ளார். இதற்காக ரூ.15 ஆயிரம் முன் பணம் (அட்வான்ஸ்), மாதம் ரூ.2,500 வாடகை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மாதேஷ் வீட்டை காலி செய்து விட்டுச் சென்றுள்ளார். இதையடுத்து வீட்டுக்கு வழங்கிய முன் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.

Advertisement

ஆனால் செல்வராஜ் பணத்தை கொடுக்காமல் தாமதப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாதேஷ் கடந்த மாதம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து இரு தரப்பினரையும் அழைத்து போலீஸார் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாதேஷ் தனது மனைவி செல்வி, நண்பர் சங்கர், வீட்டு தரகர் முருகேசன், செல்வியின் பெற்றோர் ஆகியோருடன் சென்று செல்வராஜிடம் பணம் கேட்டுள்ளார்.

இதையடுத்து இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அது கைகலப்பாக மாறியது. வீட்டருகே கிடந்த மரக் கட்டைகளை எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் மாதேஷ் தரப்பினர் தாக்கியதில் செல்வராஜின் மகன்களுக்கும் தந்தைக்கும் காயங்கள் ஏற்பட்டன. மேலும் செல்வராஜூக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மயங்கி விழுந்த அவர், அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீஸாக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி போலீஸ் கமிஷனர் சந்திரசேகரன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். செல்வராஜின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த கொலை தொடர்பாக மாதேஷின் மனைவி செல்வி, முருகேசன், சங்கர் ஆகியோரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிவிட்ட மாதேஷ் அவரது மாமனார், மாமியார் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.