தேர்களை சீரமைக்காவிடில் பச்சையப்பா அறக்கட்டளை முன்பு உண்ணாவிரதம்: இந்து ஆலய பாதுகாப்புக்குழு
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேர்களை ஜனவரி மாதம் 20-ம் தேதிக்குள்ள சீரமைக்காவிடில் சென்னையில் உள்ள பச்சையப்பா அறக்கட்டளை அலுவலகம் முன்பு ஜன.21-ம் தேதி முதல் சாகும்வரை
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேர்களை ஜனவரி மாதம் 20-ம் தேதிக்குள்ள சீரமைக்காவிடில் சென்னையில் உள்ள பச்சையப்பா அறக்கட்டளை அலுவலகம் முன்பு ஜன.21-ம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கி நடத்த முடிவு செய்துள்ளோம் என இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பச்சையப்பா அறக்கட்டளை தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேர்கள் பராமரிப்பு உள்ளிட்ட தேர் திருவிழா பணிகளை தொன்று, தொட்டு பச்சையப்பா அறக்கட்டளை நடத்தி வருகிறது. இந்நிலையில் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் தேர்கள் பழுதடைந்து அதற்குண்டான பணியினை பச்சையப்பா அறக்கட்டளை செய்யவில்லை. நடராஜர் தேர், சிவகாமசுந்தரி அம்பாள் தேர்களை சீரமைக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து இரண்டு ஆண்டுகளாக பச்சையப்பா அறக்கட்டளையினரிடமும், தீட்சிதர்களிடமூம் தெரிவித்து வந்துள்ளனர்.
ஆனால் தேர்கள் சீரமைக்கப்படாததால் தற்போது நடைபெற்ற மார்கழி ஆருத்ரா திருவிழாவின் போது தேர்களை நிறுத்தாமல் தேரோட்டம் நடத்தியதால் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் 30 ஆயிரம் பேர் தேரோட்டத்தை பார்க்க முடியாமல் போனது. இதனால் சிவபக்தர்கள் மத்தியில் பச்சையப்பா அறக்கட்டளைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே பச்சையப்பா அறக்கட்டளையினர் போர்க்கால அடிப்படையில் தேர்களை சீரமைத்து புதுப்பிக்க வேண்டும் என கடிதத்தில் மு.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.