நெல்லை அருகே ஆயுர்வேதிக் மூலப் பொருள் ஆலையில் தீ விபத்து
திருநெல்வேலி மாவட்டம் தென்களம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
திருநல்வேலி அருகே ஆயுர்வேதிக் மூலப் பொருள்கள் தயாரிக்கும் ஆலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் நாசமாயின.
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து அருகேயுள்ள தென்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பஷீர். இவர், தனது வீடு அருகில் 6 ஆயிரம் சதுரஅடி பரப்பில் ஆயுர்வேதிக் மூலப் பொருள்கள் தயாரிக்கும் ஆலை நடத்தி வந்தார். இந்த ஆலையில் அவரி, துளசி உள்ளிட்ட மூலிகை செடிகளை பொடியாக்கி அவற்றை ஆயுர்வேதிக் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வந்தார்.
சனிக்கிழமை இரவு மூலிகை பொடி அரைக்கும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாம். இதையடுத்து பழுதை சரிசெய்துவிட்டு ஆலை மற்றும் கிடங்கை மூடிவிட்டு வந்தனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆலையில் இருந்து பெருமளவில் தீ எரிவதைக் கண்டு அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பாளையங்கோட்டை, பேட்டை, சேரன்மகாதேவி தீயணைப்பு நிலையங்களில் இருந்து 6 வண்டிகள் விரைந்து வந்து 4 மணிநேரத்துக்கும் மேலாக போராடி நெருப்பை அணைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.