தமிழகத்தில் விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்காமல் அம்மா திட்டம் தொடங்குவதிலேயே முதல்வர் கவனம் செலுத்தி வருவதாக மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குற்றஞ்சாட்டினார்.
விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அக்கட்சியின் 129-வது ஆண்டு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை தனியார் அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.வேலாயுதம் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் பாப்கான் கார்த்திகேயன், ராஜபாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பங்கேற்று பேசியதாவது: இக்கட்சியை அன்றைய ஆங்கிலேயர் முதல் இன்றைய சீமான் வரையில் கட்சியை ஒழிக்க வேண்டும் என பேசிவருகின்றனர். இதுவரையில் அழிக்க நினைத்தவர்கள் எல்லாம் இந்தியாவை விட்டே விரட்டப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதேபோல், திராவிட கட்சிகளில் இருப்பவர்களை போல், பிறர் சொத்துக்களுக்கு ஆசைப்படாதவர்களாக காங்கிரஸ்காரர்கள இருக்கிறார்கள். அதனால் தான் இன்றளவும் காங்கிரஸ் கிராமங்களில் உயிரோட்டமாக இருக்கிறது.
இதுவரையில் 10 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட அளவிலும் மற்றும் வட்டாரம் என பதவி வகித்து வந்தனர். இனிமேல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றம் செய்ய வேண்டும் என்பது ராகுல்காந்தியின் எண்ணம். அதன் அடிப்படையில் மாவட்டம், கிளை நிர்வாகிகள் என மாற்றப்பட்டுள்ளனர். 2014 மக்களவை தேர்தலுக்கான அறிக்கை பொதுமக்கள் பங்களிப்புடன் தயார் செய்யப்பட இருக்கிறது. அதற்கான படிவங்கள் மாவட்டம், வட்டார நிர்வாகிகள் ஒவ்வொரு கிராமத்திற்கும் விநியோகிக்கப்பட இருக்கிறது.
அதில் தங்கள் பகுதிகளில் குறைகளை குறிப்பிட வேண்டும். மத்திய அரசு இதுவரையில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என்பது குறித்து ஒவ்வொரு வீடாக விளக்கமாக எடுத்துரைக்கவும் வேண்டும். ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் பூத் முகவர்களை நியமனம் செய்து கடுமையாக உழைக்க வேண்டும். இப்பணிகளைச் செய்து வந்தாலே போதும் எந்தக் கொம்பனாலும் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க முடியாது.
தற்போது தமிழகத்தில் விவசாயம் நலிவடைந்து வருவதோடு, மின்தடையால் பாதிப்படைந்து வருகின்றனர். மேலும், வறட்சியால் விவசாயிகள் தொடர்ந்து நஷ்டமடையும் சூழ்நிலை இருந்து வருகிறது. இந்திய அளவில் விவசாயம் 3-வது இடத்திலிருந்து, 17 இடத்தில் இருக்கிறது. இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அம்மா திட்டம் தொடங்குவதிலேயே முதல்வர் கவனம் செலுத்தி வருகிறார். இது குறித்து கேட்டால் மத்திய அரசு நிதி ஒதுக்காததும், மின்சாரம் வழங்காதது தான் காரணம் என குறை கூறி வருவதாக மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
அதற்கு முன்னதாக மாவட்ட தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட எஸ்.வேலாயுததுக்கு எம்.பி. மாணிக்கம் தாகூர், மேலிட பார்வையாளர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் பழனிவேல் ஆகியோர் பதவிப்பிரமானம் செய்து வைத்தனர். இதில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.