நின்றிருந்த பேருந்தின் பின்புறத்தில் லாரி மோதி 2 பேர் பலி: 20 பேர் படுகாயம்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நின்றிருந்த பேருந்தின் பின்புறத்தில் லாரி மோதியதில் பயணிகள் இருவர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நின்றிருந்த பேருந்தின் பின்புறத்தில் லாரி மோதியதில் பயணிகள் இருவர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஓமலூரை அடுத்த மூக்கனூரில் இருந்து சேலம் பழைய பஸ் நிலையத்துக்கு ஓ-17 என்ற நகரப் பேருந்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று வழக்கம்போல் மூக்கனூரில் இருந்து புறப்பட்ட பேருந்து, காலை 11.25 மணியளவில் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிக்கனம்பட்டி, குப்பூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தது.
அப்போது ஓசூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த சாம்பல் பாரம் ஏற்றிய லாரி, எதிர்பாராதவிதமாக பேருந்தின் பின்புறத்தில் பலமாக மோதியது. இதனால் பேருந்து சுமார் 200 மீட்டர் தொலைவுக்கு தள்ளப்பட்டு தேசிய நெடுஞ்சாலையின் சேவைச் சாலையைத் தாண்டி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி நின்றது. இந்த கோர விபத்தில் பேருந்தின் பின்பகுதி முழுவதும், லாரியின் முன்பகுதி பகுதியளவும் கடுமையாக சேதமடைந்தன.இந்த விபத்தில் பயணிகள் பூசாரிப்பட்டியைச் சேர்ந்த சு.மணி (50), அரூர், பி.புதூரைச் சேர்ந்த ச.பாஸ்கர் (24) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த சிக்கனம்பட்டி செல்வம் (33), கோவிந்தராஜ் (37), வீரபாண்டியூர் ஸ்ரீதர் (24), ஓபுலட்சுமி (29), சரசு (33), நல்லம்மாள் (55), மல்லிகா (37), பேருந்து ஓட்டுநர் செல்வம், நடத்துநர் மாட்டுக்காரன் புதூரைச் சேர்ந்த ரா.மனோகரன் (45), லாரி ஓட்டுநர், உதவியாளர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
Advertisement
இவர்கள் உடனடியாக ஓமலூர், சேலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்த தகவலறிந்ததும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் முத்துக்கருப்பன், பொன் கார்த்திக்குமார் (பயிற்சி), ஓமலூர் ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்ட ஏராளமான காவல்துறையினர், ஓமலூர் நிலைய அலுவலர் மாரியப்பன் (பொறுப்பு) தலைமையிலான தீயணைப்பு - மீட்புப் படை வீரர்கள் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து குறித்து ஓமலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.