தீவிரவாதி ஊடுருவலை தடுக்க ஆம்லா ஆபரேஷன்: சிதம்பரம் அருகே கடல்வழியாக தோனியில் வந்த 7 பேர் பிடிபட்டனர்
கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் புதன்கிழமை இரவு துவங்கிய ஆபரேஷன் ஆம்லாவின் போது சிதம்பரம்
கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் புதன்கிழமை இரவு துவங்கிய ஆபரேஷன் ஆம்லாவின் போது சிதம்பரம் அருகே கடலில் தோனியில் ஒத்திகைக்காக தீவிரவாதிகள் போல வந்திறங்கிய 7 பேரை அங்கு கண்காணிப்பில் இருந்த போலீஸார் பிடித்து பின்னர் விடுவித்தனர்.
தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க நடைபெறறு வரும் ஆபரேஷன் ஆம்லா பணி தொடர்பாக சிதம்பரம் காவல் கோட்டத்தில் சிதம்பரம் ரயில்நிலையம், பஸ் நிலையம், நடராஜர் கோயில், பரங்கிப்பேட்டை அண்ணன்கோயில், பிச்சாவரம், முடசல்ஓடை, ஆலப்பாக்கம், புதுச்சத்திரம், கிள்ளை, வல்லம்படுகை, பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான 3 டீம்கள் மொத்தம் 128 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதன்கிழமை இரவு முதல் ஜன.4-ம் தேதி இரவு வரை இந்த ஆபரேஷன் ஆம்லா நடைபெறுகிறது.
இந்நிலையில் சிதம்பரம் அருகே முடசல்ஓடை பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அரங்கநாதன், வேணுகோபால், கியூ பிராஞ்ச் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி, தலைமைக்காவலர்கள் வெங்கடாஜலம், குமரேசன் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வியாழக்கிழமை மதியம் 1 மணிக்கு முடசல்ஓடை தோனித்துறையில் நாகப்பட்டினத்திலிருந்து தோனியில் வந்த 7 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் விபரம் வருமாறு: டீம் கேப்டன் அனில்குமார் (கப்பல் படை), சென்னை கமாண்டோ பிரிவினர் சதாம்உசேன், ரகுபதி, நோபால்சிங், சுராப் சிங் (கப்பல் படை), விகாஸ், விநோத்குமார் (கடலோர காவல்படை) ஆகிய 7 பேரை பிடித்தனர். மேலும் அவர்களிடமிருந்து கறுப்பு பேட்டரி சார்ஜரும், ஓயர்லெஸ் செட்டும் கைப்பற்றப்பட்டது. கடல்வழியாக ஊடுருவியர்களை பிடித்த காவல்துறையினரை ஏஎஸ்பி எம்.துரை பாராட்டினார். ஒத்திகைக்க்காக பிடிக்கப்பட்டவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர். தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை ஒவ்வொரு கடற்கரை மாநிலங்களிலும் ஆபரேஷன் ஆம்லா என்ற பயங்கரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.