அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல: அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு
பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உதயசந்திரன், பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் தெரிவித்தது: பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் போராட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி ஆதரவு அளித்தத
அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள்-ஊழியர்களின் போராட்டம் அரசுக்கு எதிரானது அல்ல. பல்கலைக்கழகத்தை சீர்திருத்த வேண்டும் என கோரிதான் போராடுகிறோம் என பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உதயசந்திரன், பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் தெரிவித்தது: பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் போராட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி ஆதரவு அளித்ததற்கு வரவேற்கிறோம். யார் ஆதரவு அளித்தாலும் வரவேற்போம். அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள்-ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என உயர்கல்வித்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். அரசு எங்களது உணர்வுகளை புரிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழக இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சரை நியமிக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்-ஊழியர்கள் எண்ணிக்கையை அரசு அதிகரித்து, அதற்கான நிதியினை வழங்க வேண்டும். தமிழகஅரசு அறிவித்துள்ள பொங்கல் போனஸ், அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து வலியுறுத்தினோம். அதற்கு அவர் ஊதியம் வழங்குவதற்கே நிதி நெருக்கடி உள்ளது என கூறிவிட்டார். எனவே நாங்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் துணைவேந்தர் விடுதி முன்பு ஜன.14-ம் தேதி காலை 10 மணிக்கு பொங்கல் வைக்கும் நேரத்தில் கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டத்தை நடத்தவுள்ளோம் என பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.