சிதம்பரத்தில் பணம் இல்லாமல் ஏடிஎம்கள் மூடப்பட்டது: பொதுமக்கள், பல்கலை. மாணவர்கள் அவதி
சிதம்பரம் மற்றும் அண்ணாமலைநகரில் பகுதிகளில் சுமார் 25-க்கும் மேற்பட்ட வங்கி ஏடிஎம் மையங்கள் உள்ளன. குறிப்பாக பாரதஸ்டேட் வங்கி, விஜயாவங்கி, கனராவங்கி,
சிதம்பரம் பகுதியில் உள்ள பெரும்பான்மையான வங்கி ஏடிஎம் மையங்கள் பணம் இல்லாமல் மூடப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள் பணம் எடுக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சிதம்பரம் மற்றும் அண்ணாமலைநகரில் பகுதிகளில் சுமார் 25-க்கும் மேற்பட்ட வங்கி ஏடிஎம் மையங்கள் உள்ளன. குறிப்பாக பாரதஸ்டேட் வங்கி, விஜயாவங்கி, கனராவங்கி, இந்தியன்வங்கி, இந்தியன்ஒவர்சிஸ் வங்கி, சிட்டியூனியன்வங்கி, ஐசிஐசிஐவங்கி, ஆக்ஸிஸ்வங்கி, பாங்க ஆஃப் இந்தியா, கரூர்வைஸ்யா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சிண்டிகேட் வங்கி உள்ளிட்ட வங்களின் ஏடிஎம் மையங்கள் உள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.13-ம் தேதி முதல் ஜன.16-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டது. வங்கி ஏடிஎம் மையங்களில் வைக்கப்பட்ட பணம் தீர்ந்து போனதால், மீண்டும் பணம் வைக்கப்படவில்லை. இதனால் நேற்று(திங்கள்கிழமை) காலை முதல் நோ சர்வீஸ் என போர்டு வைக்கப்பட்டு ஒவ்வொரு ஏடிஎம் மையங்களாக மூடப்பட்டது. இதனால் சிதம்பரம், அண்ணாமலைநகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், குறிப்பாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சிதம்பரத்தில் தங்கி பயிலும் பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள் வங்கியிலும், வங்கி ஏடிஎம் மையங்களிலும் பணம் எடுக்க முடியாமல் பெரிதும் அவதிக்குள்ளாகினர். எனவே எதிர்காலத்தில் தொடர் விடுமுறை காலங்களில் பொதுமக்கள் நலன் கருதி ஏடிஎம் மையங்களையாவது வங்கி நிறுவனங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.