ஸ்ரீவில்லிபுத்தூரில் லஞ்சம் பெற்ற வனச்சரகர், வனவர் கைது: ரூ.30 லட்சம் பணம், நகை பறிமுதல்
தேக்கு மரங்களை வெட்ட லஞ்சம் பெற்ற வனச்சரகர் மற்றும் வனவரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேக்கு மரங்களை வெட்ட லஞ்சம் பெற்ற வனச்சரகர் மற்றும் வனவரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வடக்கு கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (52). இவர், முத்து வெங்கட்ராயபுரத்தில் உள்ள ராமர் என்பவரது விவசாய நிலத்தில் இருந்து 50 தேக்கு மரங்களை விலை கொடுத்து வாங்கியுள்ளார். இதனை வெட்டுவதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகர் வேலுச்சாமியிடம் 1.7.2013ம் தேதி மனு செய்துள்ளார்.
வனச்சரகர் வேலுச்சாமி, வனவர் பாலமுருகனை தேக்கு மரங்கள் இருக்கும் இடத்தை போய் பாருங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து ராமச்சந்திரன் செல்போனில் பாலமுருகனை தொடர்பு கொண்டுள்ளார். நீங்கள் மரங்களை வெட்டிக் கொள்ளுங்கள். பின்னால் என்னை வந்து பாருங்கள் என்று கூறியுள்ளார் வனவர்.
Advertisement
இதையடுத்து மரங்களை வெட்டிய பிறகு, 9.7.2013ஆம் தேதி ராமச்சந்திரன் வனவர் பாலமுருகனை சந்தித்துள்ளார். மரம் வெட்டுவதற்கு அரசுக்கு ரூ.300 கட்ட வேண்டும். எனக்கு ரூ.1000 தர வேண்டும், வனச்சரகர் வேலுச்சாமிக்கு ரூ.4000 தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனை அடுத்து ராமச்சந்திரன் விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார்.
செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் ராமச்சந்திரன் லஞ்சப் பணம் ரூ.5000ஐ வனவர் பாலமுருகனிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாலமுருகனை கைது செய்தனர்.அவர் கொடுத்த தகவலின் பேரில் வனச்சரகர் வேலுச்சாமி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சியாமளா தேவி, ஆய்வாளர்கள் விஜயகாண்டீபன், சுவாமிநாதன் ஆகியோர் போலீஸ் படையுடன் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது கணக்கில் வராத ரூ.30 லட்சம் பணம், 16 பவுன் நகைகள் வனச்சரகர் வேலுச்சாமியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து போலீஸார், வனச்சரகர் வேலுச்சமி மற்றும் பாலமுருகனை கைது செய்தனர்.