பஸ்-லாரி மோதி விபத்து: 3 பேர் சாவு
சேலத்திலிருந்து மதுரை நோக்கி அரசு பஸ் வந்துகொண்டிருந்தது.அப்போது சேலத்திலிருந்து மதுரை நோக்கி சென்ற சரக்கு லாரியை, வாடிப்பட்டி சாணாம்பட்டி அருகே பஸ் முந்த முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலையில் அரசு பஸ்ஸும், லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயமடைந்தனர்.
சேலத்திலிருந்து மதுரை நோக்கி அரசு பஸ் வந்துகொண்டிருந்தது.அப்போது சேலத்திலிருந்து மதுரை நோக்கி சென்ற சரக்கு லாரியை, வாடிப்பட்டி சாணாம்பட்டி அருகே பஸ் முந்த முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், எதிர்பாராதவிதமாக மிக மெதுவாகச் சென்ற லாரியின் பின்புறத்தில் அரசு பஸ் மோதியுள்ளது.இந்த விபத்தில் பஸ்ஸின் முன்பக்கம் சேதமடைந்தது. பஸ் ஓட்டுநரான மதுரை மாவட்டம் சிந்துபட்டி பகுதி கட்டத்தேவன்பட்டியைச் சேர்ந்த கண்ணாடி (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 48 வயது மதிக்கத்தக்க ஆண் பயணி ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிழந்தார்.
விபத்தில் பஸ்ஸில் பயணித்த மதுரை திருமங்கலம் அருகே உள்ள விடத்தகுளத்தைச் சேர்ந்த செல்வம் (44), சேலதம் ஆத்தூர் சாலைப் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (36), சேலம் ராமமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த ரவி (36) உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அதில் செல்வம், கார்த்திக், ரவி ஆகியோர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் உயிரிழந்தார். ஆகவே விபத்தில் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
விபத்து குறித்து வாடிப்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர். சமீப காலமாக மதுரை ஊரகப் பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதும் அதில் உயிரிழப்புகள் ஏற்படுவதும் நிகழ்ந்துவருகிறது. இதைத் தடுக்க காவல் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்.