சென்னைக்கு தண்ணீர் எங்களுக்கு கண்ணீரா: நீர்தேக்க திட்டத்தை எதிர்க்கும் மக்கள்
சென்னைக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கில் கண்ணன்கோட்டையில் அரசு அமைக்க உள்ள குடிநீர் தேக்க திட்டத்தினால் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு அதனால் விவசாயிகள்
தற்போதைய செய்திகள்சென்னைக்கு தண்ணீர் எங்களுக்கு கண்ணீரா: நீர்தேக்க திட்டத்தை எதிர்க்கும் மக்கள்
சென்னைக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கில் கண்ணன்கோட்டையில் அரசு அமைக்க உள்ள குடிநீர் தேக்க திட்டத்தினால் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு அதனால் விவசாயிகள்
சென்னைக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கில் கண்ணன்கோட்டையில் அரசு அமைக்க உள்ள குடிநீர் தேக்க திட்டத்தினால் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு அதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அத்திட்டத்தை கைவிடக் கோரி இன்று கண்ணன்கோட்டையில் உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டியை அடுத்த கண்ணன்கோட்டை ராஜன் ஏரி, தேர்வாய் கண்டிகை ஏரி ஆகியவற்றை இணைக்கும் வகையில் கண்ணன்கோட்டை பகுதியில் ரூ. 330 கோடி செலவில் 50 மீட்டர் அகலத்திற்கு 7.9 கிலோ மீட்டர் தொலைவிற்கு கால்வாய் அமைத்து புதிய நீர்தேக்கம் அமைத்து அதை கிருஷ்ணா நதிநீர் கால்வாயோடு இணைத்து இந்த புதிய நீர்தேக்கத்தில் 1டி.எம்.சி நீரை தேக்கி அதனை சென்னை குடிநீர் திட்டத்திற்கு பயன்படுத்த வழி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 23-01-2012 அன்று தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தமிழக அரசு அமைக்கவுள்ள நீர்தேக்கத்திற்காக கண்ணன்கோட்டை, தேர்வாய், கரடிப்புத்தூர் ஆகிய 3 ஊராட்சிகளில் இருந்து 692.42 ஏக்கர் பட்டா நிலம், 527.92 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம், 32.13 ஏக்கர் வனத்துறைக்குச் சொந்தமான நிலம் உட்பட 1,252.47 ஏக்கர் நிலம் அரசு சார்பாக கையகப்படுத்தப்பட உள்ளது. 1252.47 ஏக்கர் நிலத்தில் சுமார் 1000 ஏக்கர் நிலம் கண்ணன்கோட்டை கிராமத்தை சேர்ந்தது. இதில் புறம்போக்கு நிலம் இருந்தாலும் அதிலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் பயிர் செய்து பிழைத்து வருகின்றனர்.இதனால் இந்த நீர் தேக்க திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி இந்த திட்டத்தை எதிர்த்து 13-02-2012 அன்று கண்ணன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியரிடம் இந்த திட்டத்தை ரத்து செய்யக் கோரி மனு அளித்ததோடு, முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அளித்தனர். தொடர்ந்து கடந்த 12-09-2012 அன்று கண்ணன்கோட்டை பகுதி மக்களின் சார்பாக சாலை மறியல் நடத்தப்பட்டது, அதன் பிறகு மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கண்ணன்கோட்டை பகுதி மக்கள் சார்பாக நீர் தேக்க திட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழக அரசுக்கு 1000 போஸ்ட் கார்டுகளும் அனுப்பியுள்ளார்கள்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தித்தாளில் நீர்தேக்க திட்டத்திற்காக நிலம் கையப்படுத்தப்படும் நில விவரங்கள் வெளிவந்த நிலையில், நிலம் கையகப்படுத்தப்படும் இடங்களில் அதிகாரிகள் கடந்த 2நாட்களாக அளவை பணிகளை நடத்தி இருக்கிறார்கள்.இதனை தொடர்ந்து கண்ணன்கோட்டை கிராம மக்கள் சுமார் 500 பேர் ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள் இராதன் தலைமையில் நீர் தேக்க திட்டத்தை கைவிடக் கோரி உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அப்துல்ரஹீம், நீர் தேக்க திட்ட தனி வட்டாட்சியர் செந்தில்நாதன், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி சிவராஜ், இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் உட்பட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தையில் தற்போது நடைபெற்று வரும் நீர்தேக்க திட்ட பணிகளை நிறுத்துவதாகவும் பொதுமக்கள் சார்பாக அளிக்கப்பட்ட மனுவை உயர் அதிகாரிகள் மூலமாக முதல்வருக்கு தெரியப்படுத்துவதாகவும், அதனை தொடர்ந்து ஒரு சுமூக முடிவை எடுக்கலாம் என்று கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் உண்ணாவிரதத்தை விலக்கிக் கொண்டனர்.விவசாயத்தை மட்டுமே தொழிலாக கொண்ட தங்கள் ஊரில் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு அதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட உள்ளதால் இந்த குடிநீர் திட்டம் ரத்து செய்யப்படும் வரை போராட உள்ளதாக கண்ணன்கோட்டை பகுதி மக்கள் தெரிவித்தனர்.